கோவையில் வன்முறையை கட்டவிழ்த்து விட அதிமுக சதித்திட்டம்! அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு புகார்!
கோவை: வாக்கு எண்ணிக்கையின் போது கோவையில் வன்முறையை கட்டவிழ்த்து விட அதிமுக சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஒரு வார்டுக்கு 100 பேர் வரை ஆட்களை அழைத்து வர வேண்டும் என கட்சியினருக்கு அதிமுக ரகசிய உத்தரவு போட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் வாக்குப்பதிவின் போதும் கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து செயல்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுகவே கைப்பற்றும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தேர்தல் எவ்வாறு தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்றதோ அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக சதித்திட்டம்
ஆனால் கோவையில் அதிமுகவினர் ரகசிய கூட்டம் நடத்தி, வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணிக்கை மையம் முன்பாக வார்டுக்கு 100 பேரை குவிக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், கோவையில் அதிமுக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் ஓட்டு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்.

சட்டத்தை கையிலெடுத்து
தேர்தல் அன்று வாக்குச்சாவடி மையத்திற்குள் வேட்பாளரும், முகவரும் மட்டுமே செல்ல சட்டத்தில் இடமுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு சம்பந்தமே இல்லாத வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றார்கள் என்றும் சட்டத்தை கையிலெடுக்க அவர் முயற்சித்தார்கள் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றஞ்சாட்டினார். நாளைய தினம் கோவையில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டாலும் கூட, திமுகவினர் பொறுமையை கடைபிடித்து வாக்கு எண்ணிக்கையில் முழு கவனமுடன் இருக்கவேண்டும் என எடுத்துக்கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் நம்பிக்கை
கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், என அனைத்து இடங்களிலும் திமுகவே வெற்றிபெறும் என அதிமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். வாக்குப் பெட்டிகள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் செந்தில்பாலாஜி சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications