'ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா..' திடீரென பாப்பம்மாள் காலில் விழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. வைரல்!
கோவை: கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே விருது பெற்ற விவசாய மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்று நெகிழ்ச்சியூட்டினார்.
Recommended Video
ஆற்றல் என்ற தனியார் அமைப்பின் சார்பில் ஆற்றல் விருது வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
பஞ்சாப் தேர்தல்: பாஜக உடன் அமரீந்தர் சிங் கூட்டணி.. ஆனா அவர் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. பின்னணி!
விருது வழங்கும் விழா
இந்த விருது வழங்கும் விழாவில் ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், விவசாயி, துப்புரவுப் பணியாளர், செவிலியர், வீட்டு வேலை செய்பவர் என மொத்தம் 74 தொழில்களின் அடிப்படையில் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல இதில் 103 வயதில் விவசாயப் பணி மேற்கொண்டு வரும் கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது.
ஆசிபெற்ற செந்தில் பாலாஜி
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மேடையிலேயே மூதாட்டி பாப்பம்மாளின் காலை தொட்டு வணங்கி, ஆசி பெற்றார். இது காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஒவ்வொருவரிடமும் எதாவது ஒரு திறமை இருக்கும். அதனை வெளிப்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டும். சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்குத் தான் அதிகப்படியான புதிய தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோவையில் எதிர்க்கட்சிகளே வென்றுள்ள போதிலும், தமிழக முதல்வர் 234 தொகுதிகளையும் தன்னுடைய சொந்த தொகுதியாக எண்ணி திட்டங்களை வகுத்து வருகிறார்" என்றார்.
சத்யராஜ் பேச்சு
இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சத்யராஜ், "தமிழகத்தில் சரியான துறைக்குச் சரியான அமைச்சர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர். கலை போராளியாக இருப்பது சுலபம், ஆனால் கள போராளியாக இருப்பது சுலபமல்ல. அமைச்சர் செந்தில் பாலாஜி களப்போராளியாக 25 ஆண்டுகளாகத் தொடர் வெற்றிகளைப் பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்" என்றும் புகழாரம் சூட்டினார்.
யார் இந்த பாப்பம்மாள்
40 வயதைக் கடந்தாலே நடக்கச் சிரமப்படும் தலைமுறைக்கு மத்தியில் 107 வயதிலும் கெத்தாக விவசாயம் செய்து வருபவர் தான் இந்த பாப்பம்மாள். இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள தேவலபுரம் கிராமத்தில் 1914ஆம் ஆண்டு பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர், தாத்தா பாட்டியிடமே வளர்ந்தார். தற்போது கோவை மாவட்டத்தில் வசித்து வரும் இவர், தொடர்ந்து இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். இவருக்குச் சமீபத்தில் தான் மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அளித்துக் கவுரவித்திருந்தது.