20 மணி நேரம் உழைக்கும் முதல்வர் ஸ்டாலின்! கோவை மக்கள் நன்றியுடன் இருக்கணும்! செந்தில்பாலாஜி பேச்சு
கோவை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு விழாவில் பேசியிருக்கிறார்.
மேலும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கக் கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின் என்றும் அவர் புகழாரம் சூடியிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக திகழ்பவர் ஸ்டாலின் எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

அரசு விழா
கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அரசு விழாவை சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, முதலமைச்சரை வரவேற்று பேசும் போது, அரசு நலத்திட்ட உதவிகளை பொறுத்தவரை திமுக ஆட்சியில் கேட்டவர்களுக்கும் கிடைக்கும் கேட்காதவர்களுக்கும் கிடைக்கும் என பஞ்ச் அடித்தார்.

20 மணி நேரம் உழைப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றியை கொடுக்காவிட்டாலும் 234 தொகுதிகளுக்கும் ஒரே சட்டமன்ற உறுப்பினராக இருந்து வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி வருவதாக கூறினார். முதல்வரை பொறுத்தவரை நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறார் எனப் பேசினார் செந்தில்பாலாஜி.

நன்றி அரண்
அதைத் தொடர்ந்து நமக்காக உழைக்கிற முதலமைச்சருக்கு கோவை மாவட்ட மக்கள் என்றும் நன்றி உள்ளவர்களாகவும் அரணாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுக்கொண்டார். ஆழியார் விவகாரத்தை மையப்படுத்தி சிலர் கோவை மக்களையும், விவசாயிகளையும் போராட்டத்துக்கு தூண்டி வருவதாகவும் மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அவர் செயல்படுத்தமாட்டார் எனவும் உறுதியளித்தார்.

முதல்வர்களுக்கு முதல்வர்
இதுமட்டுமல்லாமல் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக திகழ்பவர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. தமிழகத்தில் மக்கள் போராட்டக்களத்துக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது என்றும் எதையும் போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலை திமுக ஆட்சியில் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications