கொங்குவில் முதல்வர்.. 2 ஆயுதங்கள் இருக்கு.. எடப்பாடி பழனிசாமியை "மிரட்டிய" ஸ்டாலின்
கோவை: ஜெயலலிதா ஆவியுடன் பேசுவதாக சமாதியில் அமர்ந்து தியானம் செய்தவர்தான் ஓபிஎஸ் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார்.
அங்கு மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள 30 சதவீதத்தை விரைவில் நிறைவேற்றுவோம்.

சஸ்பென்ஸ்
ஜெயலலிதா மறைவு ஒரு சஸ்பென்ஸாக இருக்கிறது என நாம் சொல்லவில்லை, அதிமுகவினரே சொல்கிறார்கள். ஜெயலலிதா சிறைக்கு செல்லும் போதெல்லாம் முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். இவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு ஜெயலலிதா ஆவியுடன் பேசுவதாக சமாதியில் தியானம் செய்தார். நீதி கேட்டார்.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரே சொன்னார். ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த ஒப்புக்காக ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சி இருக்கும் வரை அந்த கமிஷன் ஒப்புக்கு நடந்து வந்தது. அப்போது நாம் ஆட்சிக்கு வந்தால் ஆறுமுகசாமி கமிஷன் முறையாக நடத்தி முறையாக அறிக்கையை பெற்று நடவடிக்கை எடுப்போம் என சொன்னோம்.

4 நாட்கள்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கையை கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதை இப்போது சொல்ல மாட்டேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டசபையில் தெரிவிப்போம். அறிக்கைகளை நாங்களே வைத்துக் கொள்ள மாட்டோம். பொது வெளியில் வெளியிடுவோம்.

ரூ. 1000 உரிமைத் தொகை
ஆறுமுகசாமி ஆணையம் செய்த பரிந்துரைகளின்படி சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றவர் இபிஎஸ். இந்த அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும்.
மக்கள் என்னிடம் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் மனுக்களை அளிக்கிறார்கள். நிதி பிரச்சினை சீரமைத்த பிறகு மகளிருக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications