ஆஹா.. இதுதான் "சகோதரத்துவம்".. இந்துக்களின் தாகத்தை தீர்க்கும் இஸ்லாமியர்கள்.. கோவையில் கசியும் ஈரம்
ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் உதவி வருகின்றனர்
கோயம்புத்தூர்: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திருவிழாவில் கோயிலுக்கு வரும் இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில் கொடுத்து தங்களுடைய மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோயம்புத்தூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் குழந்தை வரம் வேண்டியும், குடும்ப பிரச்னைகள் தீரவும் மக்கள் வழிபடுகின்றனர். 13ம் நூற்றாண்டில் இருளர் சமூக மக்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்வந்த ஆட்சியாளர்களால் கவனிக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர் மைசூர் அரசர்களில் ஒருவரான மகிசாசுர மர்த்தினியால் 600 ஆண்டுகள் கழித்து கோயில் சீரமைக்கப்பட்டது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குடமுழுக்கு விழா நடைபெறும். கடைசியாக 2014ம் ஆண்டு ஜூலை மாதம் திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து இன்று திருவிழா நடைபெற்று வருகிறது. வெளியூரில் வேலைக்காக சென்றிருந்த பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவையொட்டி கோவை திரும்பியுள்ளனர்.

நேத்திக்கடன்
திருவிழாவுக்கு முன்னதாக கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிசாட்டுடன் கோனியம்மன் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து கிளி, புலி உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதனையடுத்து நேற்றிரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை முதல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயிலுக்கு அருகில் இருக்கும் தேருக்கு உப்பு மற்றும் மிளகை பக்தர்கள் நேத்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்.

மத நல்லிணக்கம்
கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை இருப்பதால் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை கோயிலை சுற்றியுள்ள உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, சலிவன் வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து உபசரித்து வருகின்றனர்.

வெயில்
மார்ச் மாதம் தொடங்குவதற்கு முன்பே கொங்கு மாவட்டங்களில் வெயில் கடுமையாக வீசி வரும் நிலையில் இன்று திருவிழாவுக்கு வரும் பக்தருக்கு தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து இஸ்லாமியர்கள் உபசரித்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து இஸ்லாமியர்களிடம் பேசுகையில் "கோயிலின் குடமுழுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாலும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு தண்ணீர் பாட்டில்களை கொடுத்து வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும்
கடந்த ஆண்டு தீச்சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு பாட்டில் தண்ணீரை நாங்களே குடிக்க வைத்தோம். இது பெருமைக்காக சொல்லவில்லை. தீச்சட்டி ஏந்துபவர்கள் சட்டியை கோயில் சன்னதிக்குள் போகும் வரை கீழே வைக்க முடியாது. எனவே அவர்களுக்கு யாராவது நீர் ஆகாரத்தை ஊட்டி விட வேண்டும். நாங்கள் ஒரு சகோதரராய் அதைதான் செய்தோம்" என்று கூறியுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த உதவிக்கு பலரும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications