2 மாத கோவை சிசு மர்ம காய்ச்சலுக்குப் பலி.. இன்னும் பெயர் கூட வைக்காத சோகம்!
கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
கோவை: தம்மாதூண்டு ஏடீஸ் என்னும் கொசு செய்து வரும் அட்டகாசம் தாங்கவே முடியவில்லை. தமிழகத்தையே மிரட்டி மிரட்டி பீதியை ஏற்படுத்தி வரும் மர்ம காய்ச்சலுக்கு இன்றும்கூட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பிஞ்சு குழந்தைகளும் அடங்குவர்!!
வருடத்திற்கு வருடம் டெங்குவால் மரணமடையும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. சமீபத்தில் கொட்டி தீர்த்த பருவமழை காரணமாகவே இந்த காய்ச்சல்கள் வர ஆரம்பித்துள்ளது.
வைரஸ் காய்ச்சல்
குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாகவே இந்த காய்ச்சல் அதிகமாகி உயிரையும் கொன்று வருகிறது.
மருத்துவர்கள் குழு
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கிராம பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் ஏராளமான மருத்துவர்கள், நர்ஸ்கள், அடங்கிய குழுவினர் முகாமிட்டு கிராம மக்களை பரிசோதனை செய்தனர்.
ஜீரணிக்க முடியவில்லை
இதுபோல மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது. ஆனாலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. சென்னை மாதவரத்தில் இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில், தற்போது அதேபோன்று இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் கோவையிலும் உயிரிழந்துள்ளார்கள்.
3 பேர் பலி
கோவை அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ராமமூர்த்தி என்ற 50 வயது நபரும், தருண் என்ற ஒன்றரை மாத குழந்தையும், மேலும் முகமது அப்துல் என்பவரின் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், தாராபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் தன் இரண்டரை மாத குழந்தைக்கு இன்னும் பெயர்கூட வைக்கவில்லை என்பதுதான்.