கோவை பாரதியார் பல்கலை.யில் அதிர்ச்சி.. நிர்வாணமாக மாணவிகள் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள்
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதிக்கு ஆயுதம் ஏந்தியும், நிர்வாணமாகவும் மர்மநபர்கள் நுழைவதாக கூறியும், உரிய பாதுகாப்பு வழங்ககோரியும் பல்கலைக்கழக மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்மநபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அச்சம் அடைந்தனர்.

நடவடிக்கை இல்லை
இதுகுறித்து மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் அச்சத்திலேயே விடுதியில் தங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாணவியர் விடுதிக்குள் 5 மர்மநபர்கள் புகுந்ததாகவும், ஒருவர் நிர்வாணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் தங்கள் அறையை பூட்டிக்கொண்டு பாதுகாப்பாக இருந்தனர்.

ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறியும் விடுதி மாணவிகள் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவுவாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோஷம்
அப்போது சில மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்ததால் அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டு ஆர்ப்பாட்டம், தர்ணாவை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் விடுதியில் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் எங்களுக்கு நீதி வேண்டும், விடுதிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். மேலும் துணைவேந்தர் வந்து பாதுகாப்பு குறித்து உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

போலீசார் பேச்சு
இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்வதாகவும், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படியும் கூறினர். இதையடுத்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications