அதிர்ந்துபோன கோவை.. MyV 3 Ads செயலி முடக்கம்.. ஓணர் கைதை தொடர்ந்து போலீஸ் அதிரடி
கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த Myv 3 ads செயலியின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த செயலியை போலீசார் அதிரடியாக முடக்கி உள்ளனர்.
கோவையை தலைமையிடமாக கொண்டு எம்எல்எம் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சக்தி ஆனந்தன் உள்ளார். இவர் MYV 3 Ads எனும் பெயரில் செல்போன் செயலி மற்றும் யூடியூப் வைத்துள்ளார். இதில் தினமும் விளம்பரம் பார்ப்பதன் மூலம் மக்கள் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது.
மேலும் இந்த செயலியில் விளம்பரம் பார்க்க புதிய நபர்களை சேர்த்து விடுவதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என தெரிவித்தார். இதை நம்பி ஏராளமானவர்கள் சக்தி ஆனந்தனை நாடியுள்ளனர். இதையடுத்து ரூ.360 முதல் ரூ.1.21 லட்சம் வரை பணம் செலுத்தி பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து விளம்பரம் பார்க்க தொடங்கினர்.

இதையடுத்து அவர் பொதுமக்களுக்கு விளம்பரம் பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட பணத்தை வழங்கி வந்துள்ளார். அதோடு ஆயுர்வேத கேப்சூல்களும் வழங்கி உள்ளார். இந்த கேப்சூல்கள் மருத்துவர்களின் ஒப்புதல் இன்றி வழங்கப்பட்டதாகவும், ஆசை வார்த்தை கூறி அவர் மக்களை பணம் கட்ட தெரிவித்து மோசடி செய்வதாகவும் புகார் எழுந்தது.
மேலும் சக்தி ஆனந்தன் மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சக்தி ஆனந்தனிடம் விசாரிக்க முயன்றபோது பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி பரபரப்பை கிளப்பினர். மேலும் சக்தி ஆனந்தனும் தான் தவறு எதுவும் செய்யவில்லை. பொய்யான புகாரில் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் தன்னை பற்றி பொய்த்தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதற்கிடையே தான் சக்தி ஆனந்தனை கோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 15 நாட்கள் நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சக்தி ஆனந்தன் நடத்திய வந்த MyV 3 Ads செயலியை போலீசார் அதிரடியாக முடக்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications