கேம்ப்ஃபயரால் வந்த வினை.. பக்கத்து வீட்டுக்காரர் கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொலை - சூலூரில் பரபரப்பு
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே கேம்ப்ஃபயர் போடுவதில் தகராறு ஏற்பட்டதில் பக்கத்து வீட்டுக்காரரை கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி, காந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (34). இவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கோடை விடுமுறையை தனது தந்தையுடன் கழிப்பதற்காக மணிகண்டனின் மகன் மற்றும் மகள் தங்களது ஊரில் இருந்து வந்துள்ளனர்.

மணிகண்டனும் ஊரிலிருந்து வந்திருந்த தனது மகன் மற்றும் மகளுடன் நேரத்தை செலவழித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், மணிகண்டன் தனது வீட்டுக்கு அருகே தனது மகள் மற்றும் மகனுக்காக கேம்ப்ஃபயர் ஏற்பாடு செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான நவீத் முசிலையாவோடு கேம்ப்ஃபயர் அமைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மணிகண்டன் என் மகனை ஏன் திட்டினாய் என்று கேட்டு நவீத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டிலிருந்த கிரிக்கெட் பேட்டால் நவீத்தை தலையில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தாக்கியதோடு மட்டுமல்லாமல் படுகாயமடைந்த நவீத்தை சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சாலையில் இழுத்துச் சென்று மீண்டும் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சூலூர் காவல் துறையினர், நவீத் முசிலையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகவும், நவீத் தனது வீட்டிலிருந்த பொருட்களை திருடி விற்றதாக கூறுவதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கேம்ப்ஃபயர் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications