கார் சிலிண்டர் வெடிப்பு.. தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் என்ஐஏ ரெய்டு.. ரூ.75 லட்சம் பறிமுதல்
கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்திய நிலையில் ரூ 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் போலீஸார் வாகன தணிக்கையால் என்ன செய்வது என தெரியாமல் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து முபின் உயிரிழந்தார் என்றும் தெரிகிறது. இந்த நிலையில் கோவை போலீஸார் விசாரணை நடத்தியதில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.
சிலிண்டர் வெடிப்பில் 12 ஆவது நபராக கைதான இட்ரீஸை சென்னை அழைத்து வந்தனர். இவர் முபினின் நண்பர். சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பு நிறைய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இவரை என்ஐஏ அதிகாரிகள் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. அது போல் 3 ஆண்டுகளாக முகமது இட்ரீஸின் செல்போனையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
கோவையில் இட்ரீஸிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவையில் 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கோவையின் உக்கடம், போத்தனூர், கரும்புக் கடை உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
கோவை ஜி.எம்.நகரில் அபுதாஹிர், குனியமுத்தூரில் சுகைல், கரும்புக் கடையில் மன்சூர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அது போல் தென்காசியில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் புஹாரி என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அது போல் சென்னை திருவிக நகரில் காமராஜர் தெருவில் முஜ்புர் ரகுமான் வீட்டிலும், அயனாவரம் மயிலப்பன் தெருவில் ஜக்கிரியா என்பவர் வீட்டிலும் இந்த சோதனை நடந்தது. இவர்கள் மூவர் வீட்டிலிருந்தும் முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் வரும் 20ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க், ரூ 60 லட்சம் பணம், 18,200 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை மொத்தம் ரூ 75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications