கோவை கார் வெடிப்பு: அண்ணாமலைக்கு தகவல் கொடுத்தது யார்? என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: செந்தில் பாலாஜி
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) (NIA) விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி உள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: கோவை சம்பவங்கள் தொடர்பாக ஒரு கட்சியினர் (பாஜக) சொல்லும் செய்திகளை பெரிதுபடுத்த வேண்டாம். கோவையில் தற்போது அமைதி நிலவுகிறது.

அண்ணாமலைக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்?
கோவை சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை தொடங்கு முன்பே சில தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அவருக்கு எப்படி இந்த தகவல்கள் கிடைத்தன? கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்? அண்ணாமலையும் சீருடை அணிந்து பணியாற்றியவர்தான். அவருக்கு மேலே அதிகாரிகள் இருந்திருப்பார்கள். ஒரு விசாரணை நடத்துவதற்கு முன்பே தாம் நினைத்த கருத்துகளை தான்தோன்றித்தனமாக கூறுவாரா?

அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அண்ணாமலை
அரசியல் செய்வதற்காக கோவை சம்பவத்தை பாஜக பயன்படுத்துகிறது. ஏற்கனவே மதுரையில் ராணுவ வீரர் இறப்பு சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தவர்தான் அண்ணாமலை என்பது அனைவருக்கும் தெரியும். கோவையில் மக்கள் இயல்பு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவருக்கு அடிப்படை அறிவும் அரசியல் பக்குவமும் இல்லை. ஒரு கட்சியின் தலைவராகிவிட்டால் அக்கட்சியை வளர்க்க, மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து போராடி தீர்வு காணவேண்டும். அதை செய்யாமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற வகையில் அரசியல் செய்யக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திதான் கட்சியை வளர்க்கும் அரசியல் செய்ய வேண்டும்.

என்.ஐ.ஏ.விசாரிக்கனும்
கோவை சம்பவம் தொடர்பாக மாநிலம் கடந்தும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. அதனால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். என்.ஐ.ஏ. முதலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கோவை சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு கோவை சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே தெரியுமா? அல்லது அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என்று விரும்பினாரா? என என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்.

பாஜக பந்த்
கோவையில் பந்த் நடத்த வேண்டிய எந்த ஒரு தேவையும் இல்லை. கோவையில் பந்த் என்ற அறிவிப்பை வெளியிட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதுவும் 1998-ம் ஆண்டு கோவை வெடிகுன்டு சம்பவ படங்களை இணைத்து பாஜக போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. கோவையில் பந்த் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளுக்கு பாஜக முழு அடைப்பு, பந்த் அறிவித்ததா?

தேர்தலுக்காக பாஜகவின் சதி
நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுகிறது. அது ஒருபோதும் பெரியார் மண்ணில் நடக்காது. கோவை சம்பவத்தில் தமிழகத்தில் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்த ஒரே ஒரு கட்சி பாஜகதான். பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications