கைதுக்கு பயந்து ஊர் ஊராக செல்லும் நிகிதா? கோவையில் தஞ்சம்... போலீஸ் கண்டுகொள்ளவில்லையென புகார்
கோவை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக பலரும் புகார் அளித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த புகார்கள் விவரம் வெளிவந்த நிலையில், நிகிதாவை பிடித்து விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நிகிதா தனது சொந்த ஊரில் இல்லை. கைது பயந்து ஊர் ஊராக சுற்றுவதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். கோவையில் தஞ்சமடைந்ததாகவும்,நேரில் பார்த்தவர் போலீஸாருக்கு தகவல் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரை பல்வேறு பல்வேறு தகவல்கள் தினமும் வெளிவந்தபடி உள்ளன. இவர் ஓய்வு பெற்ற துணை கலெக்டரின் மகள் என்று உறவினர்கள் கூறுகிறார்கள். இவரால் பாதிக்கப்பட்டதாக பலரும் குற்றம்சாட்டி பேட்டி அளித்து வருகிறார்கள். எனவே நிகிதாவை போலீசார் விசாரணைக்கு அழைத்து நகை திருட்டு உண்மையில் நடந்ததாக இல்லை பார்க்கிங் பிரச்சனையில் நடந்த தகராறு காரணமா என்று விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

யார் இந்த நிகிதா
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபெருமாள்.இவரது மனைவி சிவகாமி அம்மாள். இந்த தம்பதியின் மகள் தான் நிகிதா . இதில் ஜெயபெருமாள் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர். நிகிதாவும் அவரது தாயாரும் சேர்ந்து முக்கிய பிரமுகரின் உதவியாளரை தெரியும் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிலரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன
அரசு வேலை மோசடி
2010-ம் ஆண்டு அரசு வேலை ஆசையில் ரூ.16 லட்சம் வரை சிலர் கொடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டியாகவும் புகார் உள்ளது. இந்த புகாரின் பேரில் அப்போது திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி கடந்த 2010ம் ஆண்டில் சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன
25 லட்சம் மோசடி
இதேபோல் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தவர்களையும் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அதேபோல் திருமங்கலத்தை சேர்ந்த அவருடைய உறவினர் தெய்வம் என்பவர் கூறுகையில், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நிகிதா என் உறவினர் . இரண்டு நாளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2010-ம் ஆண்டு ரூ.9 லட்சத்தை அவர் மூலம் அவருடைய குடும்பத்தினர் பெற்றார்கள். இதேபோல் என் உறவினர் வினோத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்காக ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சத்தை கொடுத்து ஏமாந்துள்ளோம் என்று குற்றம்சாட்டி நேற்று பேட்டி அளித்தார்.
நிகிதா விளக்கம்
அடுத்தடுத்து புகார்கள் வந்த நிலையில், நேற்று நிகிதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,நான் தலைமறைவானதாக கூறுகின்றனர். நான் என்னுடைய வீட்டில்தான் இருக்கிறேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். அஜித்குமார் இறந்ததில் நானும், எனது தாயாரும் வேதனையில் இருக்கிறோம். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோயிலில் காரை பார்க்கிங் செய்வதற்கு முன்பு எனது தாயாருக்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்த காவலாளி அஜித்குமார் ரூ.500 கேட்டார். அப்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்
பின்னர், கடைசியாக ரூ.100 தான் நான் கொடுத்தேன். மற்றபடி அதற்கும், நான் அளித்த புகாருக்கும் எந்த சம்பந்தமில்லை. கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கேன் மையத்துக்குச் செல்லவிருந்தோம். அதற்காகத்தான் ஏற்கெனவே பையில் கழற்றி வைத்திருந்த தங்க நகைகளை காரில் வைத்திருந்தோம். அது காணாமல் போனதால் , புகார் கொடுத்தோம். உயர் அதிகாரிகள் யாரும் எங்களுக்கு உறவினர்களாக இல்லை. மற்றபடி என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்று நிகிதா கூறினார்.
கோவையில் நிகிதா
இந்நிலையில் நிகிதா சொந்த ஊரில் இல்லாத நிலையில், கைதுக்கு பயந்து ஊர் ஊராக தஞ்சம் அடைவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். நிகிதாவை பிடித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வேலை மோசடி, நகை திருட்டு புகாரின் உண்மை தன்மை ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் நிகிதாவை பார்த்த சிலர் அவரை வீடியோ எடுத்துள்ளனர். நேரில் பார்த்த ஒருவர் போலீஸாருக்கு தகவல் சொல்லியும் கண்டுகொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல தேநீர் விடுதியில் இன்று காலை நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்துள்ளார். இதை கண்ட ஒருவர் தனது செல்போன் மூலம் காட்சியை பதிவு செய்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் சிறிதும் கண்டுகொள்ளவில்லையாம். சுமார் 2 மணி நேரம் அமர்ந்திருந்த நிகிதா கோவையை நோக்கி காரில் சென்றுள்ளதாக தெரிகிறது. தற்போது நிகிதா தேநீர் கடையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications