கோவை மாணவர்களுக்கு செக்.. இனி இதை செய்தால் தான் கல்லூரிக்குள் அனுமதியாம்.. போலீஸ் அதிரடி
கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநகர காவல் துறை புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது கோவை மாவட்டம். கோவை மாவட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தொழில் நகரமாக விளங்கும் கோவை மாவட்டத்துக்கு மருத்துவம், கல்வி, தொழில், வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் மாணவ, மாணவிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

கோவை மாநகரின் பிரதான பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். இப்பிரச்னையைப் போக்கும் வகையில், கோவை மாநகராட்சி, காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் இருப்பதே ஆகும்.
குறிப்பாக கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்ப்பதால் சாலை விபத்துகளின்போது உயிரை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் கோவை மாநகர போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. "No Helmet No Entry "- கோவையில் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் அனுமதிக்க வேண்டாம் என மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு கோவை மாநகரம், அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இனி மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கல்லூரிக்குள் வரும்பொழுது தலைக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அனைத்து கல்லூரி முதல்வர்களும் ஏற்றுக்கொண்டு உடனடியாக இதை அமல்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரி நுழைவாயில் முன்பும் "No Helmet, No Entry" என்ற வாசகம் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அவர்களது வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து கல்லூரி வளாகத்திற்குள் வருவதை உறுதிப்படுத்தும். வரும் நாட்களில் இத்திட்டமானது இதர முக்கிய சாலைகளில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
கல்லூரிகளைத் தொடர்ந்து பள்ளி, அரசு, தனியார் நிறுவனங்கள், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்கள் என படிப்படியாக மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிர்வாகத்தில் பயிலும் பணிபுரியும் மாணவர்கள், பணியாளர்களில் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்து இந்த முன்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications