கோவையில் வெளியே பார்க்க சாக்லேட் கவர்.. உள்ளே இருந்ததை பார்த்து ஆடிப்போன போலீஸ்.. சிக்கியது எப்படி?
கோவை: கோவை மாவட்டம் கீரநத்தத்தில் வெளியே பார்க்க சாக்லேட் கவர் இருந்தது. ஆனால் அதற்குள் சாக்லேட் போல் இருந்த பொருளை சோதித்து பார்த்த போது, அது கஞ்சா சாக்லேட் என்பது தெரியவந்துள்ளது. கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் போலீசிடம் எப்படி சிக்கினார்.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உத்தரவிட்டு வருகிறார். இதன்படி,கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் கோவில்பாளையம் கீரணத்தத்தில் சோதனை நடத்தி கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸா மாநில வியாபாரியை போலீஸாா் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

எப்படி சிக்கினார்: கோவையின் புறநகர் பகுதியான கோவில்பாளையம் கீரணத்தம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திங்கள்கிழமை கிடைத்த இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கீரணத்தம் அருகே ஒரு வீட்டில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபரைப் பிடித்தார்கள். விசாரணையில் அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சோபா்தாஸ் சமல் மகன் சஞ்சய்குமாா் சமல் (40) என தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 14,400 மதிப்பிலான சுமாா் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பார்க்க சாக்லேட் போல் இருக்கும் அதில் உள்ளே கஞ்சா உடன் கூடிய சாக்லேட் என்பது தெரியவந்தது. இதையடுத்து சஞ்சய்குமாா் சமல் கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
கஞ்சா சாக்லேட்' என்னும் போதைப்பொருள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை, கோவை, ஈரோடு , திருப்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண சாக்லேட் போலவே காட்சியளிக்கும் இந்த கஞ்சா போதை சாக்லேட்டுகள் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தே விற்பனை செய்யப்படுகிறது வடமாநிலங்களில் அதிக அளவு தயாரிக்கப்படும் இந்த கஞ்சா சாக்லேட் தமிழகத்தில் அதிக அளவில் ஊடுருவி வருகிறது. இதனை அவ்வப்போது போலீசார் தடுத்துநிறுத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டாலும், முற்றிலும் ஒழிக்க முடியாத நிலை இருக்கிறது.












Click it and Unblock the Notifications