கதிகலங்க வைத்த கார் "தீ விபத்து!" துணை ராணுவ கட்டுப்பாட்டில் கோவை!
கோவை : கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் சட்டவிரோத செயல்களுக்கு திட்டமிட்டு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளும் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிறன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றியதில் அதில் இருந்த ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் கார் தீ பற்றியதாக கூறப்பட்டது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது யார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, எடிஜிபி தாமரைன் கண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

கோவை கார் விபத்து
விபத்து தொடர்பாக சென்னை தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். காரில் எரிந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆணிகள் கோலிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர் உக்கடம் கோட்டைமேட்டை சார்ந்த ஜமேஷா முபின் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலணாய்வு முகமை விசாரணை மேற்கொண்டதும் தெரிய வந்தது.

வெடிகுண்டு தயாரிப்பு?
தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் இவரது கார் மற்றும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ஜமேசா முபின் வீட்டில் இருந்து மர்ம மூட்டைகளை சிலர் எடுத்தும் செல்லும் சிசிடிவி காட்சிகளும் கார் வெடித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக கோவை உக்கடம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

5 பேர் கைது
டிஜிபி, ஏடிஜிபி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகளே நேரடியாக களத்தில் இறங்கி விசாரித்த நிலையில், விசாரணையின் அடிப்படையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன்),ஜிஎம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்ட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு, மர்ம மூட்டைகள், நாட்டு வெடிக்குண்டின் மூல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடக்கம் செய்ய மறுப்பு
வெடிகுண்டு தயாரிக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டு வந்தார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜமேஷா முபினின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்வதற்கு ஜமாஅத்துகள் முன் வரவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. சமூக விரோத செயல்களுக்கு ஜமேஷா முபின் திட்டமிட்டு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளும் ஜமேஷா முபினின் சட்டவிரோத செயலில் ஈடுபட்டது போல தெரிய வந்ததால் அவரது உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை என கூறப்பட்டது.

துணை ராணுவம்
இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையிலேயே கோவை பூ மார்க்கெட் ஜமாத்தில் முபினின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவையில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினரும் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். பல இடங்களில் கலவர கட்டுப்பாட்டு வாகனமான வஜ்ராவும் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications