சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம்
சென்னை: சென்னை மாடம்பாக்கத்தில் 35 சவரன் தங்க நகை திருட்டு போன வழக்கில், போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த வீட்டுப் பணிப்பெண் விஜயா (50) கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரக் கொலையைச் செய்த அவரது கணவர் பன்னீர்செல்வம் (55), தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், உயிருக்குப் போராடியபடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலையைச் சேர்ந்த அனந்த பத்மநாபன் (54) என்பவர், கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரிடம் தஞ்சாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயா (50) வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
கடந்த 2025 டிசம்பர் 22 அன்று, மாடம்பாக்கத்தில் உள்ள சரோஜா என்பவரது வீட்டிற்கு விஜயா வேலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், டிசம்பர் 29 அன்று விஜயாவைக் காணவில்லை என்றும், வீட்டில் இருந்த 35 சவரன் நகைகள் திருடுபோயுள்ளதாகவும் சரோஜா சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
விஜயாவின் மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்ததால், தனிப்படை அமைத்துத் தேடி வந்த சேலையூர் போலீஸார், மேல்மருவத்தூரில் தங்கியிருந்த விஜயாவையும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணைக்குப் பிறகு, இருவரையும் ஏஜென்சி உரிமையாளர் அனந்த பத்மநாபனின் பொறுப்பில் போலீசார் ஒப்படைத்தனர். அடுத்த நாளும் (டிசம்பர் 30) விசாரணை நீடித்த நிலையில், அன்றிரவும் அவர்கள் அனந்த பத்மநாபன் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து ஏதோ சப்தம் கேட்டதை அடுத்து அனந்த பத்மநாபன், அவர்களது அறையைச் சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த அசோக் நகர் போலீசார், விஜயாவின் கழுத்தறுக்கப்பட்டு அவர் சடலமாக போலீஸாரால் கைப்பற்றப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை மீட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
கணவரின் பகீர் வாக்குமூலம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பன்னீர்செல்வத்திடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்: "நகை திருட்டு வழக்கில் சிக்கியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாக நானும் என் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தோம்.
என் மனைவிதான் கத்தியை எடுத்துக் கொடுத்தார். முதலில் அவரது கழுத்தை அறுத்து நான் கொலை செய்தேன். அதன் பிறகு, என்னை நானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றேன். ஆனால், வலி தாங்க முடியாமல் என்னால் முழுமையாக அறுக்க முடியவில்லை, அதற்குள் மயங்கி விழுந்துவிட்டேன்." என்றார்.
இச்சம்பவம் குறித்து அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை திருட்டிற்கும் இக்கொலைக்கும் உள்ள பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications