கோவையில் சட்டென பிரசார வேனிலிருந்து இறங்கிய மோடி! குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
கோயம்புத்தூர்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று கோவையில் 'ரோட் ஷோவை' நடத்தியுள்ளார். இதில், 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி இன்று ரோட் ஷோ நடத்தியிருக்கிறார்.

இதற்காக இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து தமிழக காவல் துறை மற்றும் எஸ்பிஜி பாதுகாப்போடு கோவை சாய்பாபா கோயிலில் இருந்து 2.5 கி.மீ தொலைவுக்கு 'ரோட் ஷோ' நடத்தியிருக்கிறார். பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது தவிர தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைக்குழுவினரும் பிரதமருக்கு வரவேற்பளித்தனர். அதேபோல நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது. இந்த ரோட் ஷோவின்போது, 1998ம் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு அஞ்சலி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
ஆர்எஸ்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு உயிரிழந்தோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த படங்களுக்கு அஞ்சலி செலுத்த, பிரசார வாகனத்திலிருந்து இறங்கிய பிரதமர், காலணிகளை கழற்றிவிட்டு வெறும் காலுடன் சென்று, உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து ரோட் ஷோ நிறைவடைந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் நடந்த முதல் அரசியல் பிரசாராமாக இந்த ரோட் ஷோ பார்க்கப்படுகிறது. அதேபோல இன்று, பிரதமர் மோடி பொதுமக்களிடையே உரையாற்றவில்லை.
பொதுவாக கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ள இடமாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கைகோர்த்த நிலையில், கோவையில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதேபோல 1998 கலவரத்திற்கு பின்னர் பாஜகவுக்கும் ஓரளவு வாய்ப்புள்ள இடமாகவும் கோவை இருக்கிறது. எனவே இதை வாக்கு வங்கியாக மாற்ற பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. கோவையில் அண்ணாமலை போட்டியிடலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதி செய்யும் வகையில், பிரதமரின் ரோட் ஷோ வாகனத்தில் அண்ணாமலை முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறார். மோடிக்கு பக்கத்தில் அண்ணாமலையும், மோடிக்கு சற்று பின் தள்ளி மத்திய இணையமைச்சர் எல்.முருகனும், மோடிக்கு பின்னால் வானதி சீனிவாசனும் இருந்தனர்.
மறுபுறம், கோவையில் அண்ணாமலை களமிறங்கினால், அவரை தோற்கடிக்க திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. எனவேதான் சிபிஎம்-க்கு போன முறை ஒதுக்கப்பட்ட கோவை தொகுதி இந்த முறை ஒதுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications