தமிழில் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி.. மகிழ்ச்சியோடு பகிர்ந்த பெண்மணி!
கோவை : சமீபத்தில் நடைபெற்றா காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற பெண்மணிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளதையடுத்து, அப்பெண்மணி அதனை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவு விழாவின் ஒருபகுதியாக காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர்.

காசி தமிழ்ச் சங்கமத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு பலர் கடிதம் எழுதி இருந்தனர். இதில், பலர் காசி தமிழ்ச் சங்கமத்தில் தாங்கள் பங்கேற்ற காட்சிகளுடன் வீடியோ பதிவாகவும் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்தனர். இதையடுத்து, தனக்கு கடிதம் அனுப்பிய அனைவருக்கும் பதில் கடிதங்களை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார்.
அந்தவகையில் கோவை சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் காசி தமிழ் சங்கம நிகழ்வுக்கு சென்றிருந்தனர். இவர்கள், பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கம நிகழ்வு குறித்து கடிதம் எழுதி இருந்தனர்.
இவர்களுக்கு பபிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு என்றும், ஒவ்வொருவரின் உணர்வாக இருக்கக்கூடியது என்றும் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம் என பிரதமர் மோடி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை பெற்ற துளசி அம்மாள் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, தமிழ்நாட்டைச் சேர்ந்த பலருக்கும் தமிழில் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. காசி - தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது என கடிதங்களில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழில் அச்சடிக்கப்பட்ட அந்த கடிதங்களில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். இந்த கடிதங்களை பெற்றவர்கள் அவற்றை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications