பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீர் உடல்நலக்குறைவு
கோவை: கோவை வந்த பாமக தலைவர் ஜி.கே.மணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'2018க்கு விடை கொடுப்போம், 2019ஐ வரவேற்போம்' என்ற தலைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் கோவையில் பாமகவின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் கோவை சிங்காநல்லூரில் நடைபெறுவதாக உள்ளது.

கட்சி தலைவர் என்ற முறையில், கூட்டத்துக்கான ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நேரில் பார்வையிட நேற்று ஜி.கே. மணி கோவை வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடமும் நடக்க இருக்கும் கூட்டம் குறித்து பேசினார்.
பின்னர் பேட்டியை முடித்துகொண்டு ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக பீளமேட்டில் உள்ள கேஎம்சிஎச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருதய கோளாறு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை முடிந்து ஜிகே மணி உடல் நலம் தேறி உள்ளதாகவும், இன்றோ அல்லது நாளை காலை ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications