கடிவாளம் போட்ட நீதிமன்றம்! ஈஷாவில் என்ன தான் நடக்கிறது? 2வது நாளாக போலீசார் விசாரணை!
கோவை: ஈஷா யோகா மையம் மீதான வழக்குகள், அதன் நிலை குறித்து 4ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கு 2வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் 2வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவரான காமராஜ் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் தனது மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஈஷா மையத்தில் யோகா கற்க சென்ற நிலையில், அவர்கள் மீண்டும் வரவில்லை எனவும், அவர்களை மீட்டுத் தர வேண்டுமென கூறியிருந்தார்.

மேலும், இரு மகள்களையும் ஈஷா யோகா மையத்தினர் தனி அறையில் அடைத்து துன்பறுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் நானும் என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான் என் மகள்களுடன் பேச முடியும் என கூறுகிறார்கள்.
எங்கள் மகள்களை மீட்டு தாருங்கள் என அந்த மனுவில் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மகள்களும் வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் கூறுகையில் "பெற்றோர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள்" என்றனர். அதற்கு நீதிபதிகள், "நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகிவிட்டீர்களே, பிறகு ஏன் இதையெல்லாம் பொருட்படுத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.
மேலும் நீதிபதி , ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை சன்னியாசி ஆக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து நீதிபதிகள் நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இல்லை. எனினும் ஈஷா யோகா மையம் மீது சந்தேகங்கள் உள்ளன.

எனவே ஈஷா யோகா மையம் மீது மொத்தம் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஆய்வு செய்து அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவை ஈஷா மையத்தில் அதிகாரிகள் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். நண்பகல் 12 மணிக்கு அதிரடியாக கார்களில் நுழைந்த அதிகாரிகள், இரவு சுமார் 9.30 மணி வரை ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல குழுவினர், காவல் துறையினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அங்கு சுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் அதே போல் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றை விட இன்று கூடுதலாக தனியார் வாகனங்களிலும், அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது. ஈஷாவை சேர்ந்த துறவிகள் மட்டுமல்லாது நிர்வாகிகள், பணியாளர்கள், பார்வையாளர்களிடமும் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குடும்பத்தினரை விட்டு ஈஷா மையத்திலேயே தங்கி இருக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் இடமும் விசாரிக்கப்பட்டதாகவும், அதில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மட்டும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications