கொந்தளிப்புக்காடான கோவை.. திமுகவினர் மண்டை யை உடைத்த பாஜகவினர் மீது பாய்ந்தது வழக்கு
கோவை: கோவையில் தேர்தல் விதிமுறையை மீறி பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ததை தட்டி கேட்ட திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக புகாரின் பேரில் பாஜகவினர் மீது ஆவாரம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவை ஆவாரம்பாளையம் 28ஆவது வார்டு பகுதியில் நேற்று இரவு கோவை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இரவு 10 மணியை தாண்டிவிட்டது. எனினும் அவர் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை. எனினும் தொடர்ந்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தாராம். இந்த நிலையில் ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதுகுறித்து அங்கிருந்த காவல் துறையினரிடம் புகார் செய்தனர்.
இரவு 10.40 மணி வரை அண்ணாமலை பிரச்சாரம் செய்ய எப்படி அனுமதி அளித்தீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதை அறிந்த பாஜகவினர், அந்த இடத்திற்கு வந்து திமுகவினர் தாக்குதல் நடத்தினராம். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர். இதையடுத்து அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்தில் காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குணசேகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மாசாணி, ஆனந்தன், லட்சுமி செந்தில் , ரங்ககநாதன் ஆகியோர் மீது கோவை ஆவராம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் சிலருக்கு மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications