கோவை சிறுமி வன்புணர்வு.. விரைந்து விசாரியுங்கள்.. எஸ்.பியிடம் கமல்ஹாசன் மனு!
கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை எஸ்பியிடம் மனு அளித்துள்ளார்.
கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டன குரல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்தை தற்போது கையில் எடுத்துள்ளனர்.
கோவை அருகே கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அந்த சிறுமி. கடந்த திங்கள் கிழமை காணாமல் போன குழந்தையின் சடலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் பிரேத பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாத்தா உள்பட 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக கோவை எஸ்பி பாண்டியராஜனை நேரில் சந்தித்து கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.
விரைவில் சிறுமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் மனு அளித்துள்ளார். இன்று காலைதான் கமல்ஹாசன் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.