மூட்டை மூட்டையாக கஞ்சா.. காலேஜ் பசங்களுக்கா வீடு வாடகைக்கு விடுறீங்க.. கோவை போலீஸ் எச்சரிக்கை
கோவை: கோவை மாவட்டம், சூலூர், நீலாம்பூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கம் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் மூட்டை மூட்டையாக கஞ்சா, கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புதிய வகை கஞ்சா ஆயில், கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனையின்போது கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து, சூலூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புறநகர்ப் பகுதிகளில் மாணவர்கள் என்ற பெயரில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் இன்று காலை சுமார் 250க்கும் மேற்பட்ட போலீஸார் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு செட்டிபாளையம், நீலாம்பூர், சூலூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய 36 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துதல், கல்லூரிகளில் குழு அமைத்து ரவுடிசத்தில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும்போது அவர்களது முழு விவரங்களையும் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட பின்னரே வாடகைக்கு விட வேண்டும்.
வீடு வாடகைக்கு கேட்போர் சந்தேகப்படும்படி இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல, வீடு வாடகைக்கு கொடுக்கும் நபர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநில எல்லைகளில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications