தேமுதிக இல்லாமல் ஜெயிக்க முடியாது! கூட்டணி வைக்க அனைத்து கட்சிகளும் வெயிட்டிங் -பிரேமலதா விஜயகாந்த்
கோவை: தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள் என கூறியுள்ளார் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். மேலும், இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கோவையில் மட்டும் தேமுதிக நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யப்பட்டதாகவும், இதற்கு லஞ்சம் வாங்கி சிறை சென்ற முன்னாள் அமைச்சர் தான் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும். ஆனால் தாயார் மறைவினால் வர இயலாமல் போனது.

பிரேமலதா விஜயகாந்த்
புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் நடக்கும், எவ்வித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. இன்று காலை காவல்துறையினர் கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள், நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும் காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள். ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது. கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்று சிரித்தபடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர்.
தேமுதிக கூட்டணி
தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று என்னும் கூட்டம் அவர்கள் என்றும் யார் இடையூறு செய்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல. யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?
2026 தேர்தல்
கேப்டன் மறைந்து விட்டார் கட்சி மறைந்து விட்டது என்று கூறியவர்களெல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள். காவல்துறையில் உள்ளவர்கள் கேப்டனின் உருவங்கள் தான். கேப்டனை பார்த்து தான் காவல்துறையிலும் ராணுவத்திலும் பலரும் இணைந்தார்கள். இதனை ராணுவத்தில் இருப்பவர்களே என்னிடம் கூறியுள்ளார்கள்.
கேப்டன் பாரம்பரியம்
தேமுதிகவை பார்த்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள். ஆளும் கட்சியும் இல்லை. தற்போது ஆண்ட கட்சியும் இல்லை. ஆனால் நம்முடைய கட்சி உள்ளது. நாம் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு ஆண்களும் கேப்டன் தான் பெண்கள் ஒவ்வொருவரும் லேடி கேப்டன் தான். கேப்டன் ஒரு புறம் லேடி கேப்டன் ஒரு புறம் இருக்கும் வரை இந்த கட்சியை யாராலும் தொட முடியாது. 2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெறும். நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையிலே பயணிப்போம் என்றும் வெகுவிரைவில் இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரன் அறிவிக்கப்படுவார்.
தேமுதிக வலிமை
அவர் ஜூனியர் கேப்டன் கோவையின் செல்ல பிள்ளை. மரியாதை நிறைந்த ஊர் கோவை, மரியாதை என்றால் என்ன? சுத்தம் என்றால் என்ன? என்பதை கோவையில் தான் கற்றுக் கொள்ள வேண்டும். குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக கோவை இருந்தது. ஆனால் தற்பொழுது இல்லை. 2026க்கு பிறகு தேமுதிக கூட்டணி சுத்தம் செய்து காட்டும். சிறுவாணி நீரையும் அசுத்தம் செய்து விட்டார்கள். இதனை நினைத்து தலைகுனிகிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications