கோவையில் கொடுமை.. பிரசவத்தின்போது சிசுவை கீழே போட்ட நர்ஸ்.. குழந்தை மரணம்
குழந்தை உயிரிழந்த காரணத்தினால் கோவை ஆஸ்பத்திரி முற்றுகையிடப்பட்டது.
கோவை: பிரசவத்தின்போது தாயின் வயிற்றில் இருந்து எடுத்த குழந்தையை நர்ஸ் கீழே போட்ட காரணத்தினால் குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
கோவையை அடுத்த போத்தனூரை சேர்ந்த தம்பதி விக்ரம்-பவித்ரா. பவித்ராவுக்கு 25 வயதாகிறது. நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் அதிகாலை சுகப்பிரசவத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை பிறந்தது என்று டாக்டர்கள் பெற்றோர் உட்பட யாரிடமும் காட்டவும் இல்லை, சொல்லவும் இல்லை.

இன்குபேட்டர்
குழந்தை எங்கே என்று உறவினர்கள் கேட்டதற்கு, "உடம்பு சரியில்லை, அதனால் இன்குபேட்டரில் வைத்துள்ளோம். ட்ரீட்மென்ட் போய் கொண்டிருக்கிறது. எல்லாம் சரியாயிடும்" என்று சொல்லி கொண்டே இருந்தனர்.

தலையில் குல்லா
பிறகு திடீரென்று வந்து குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதும், பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். அப்போதுதான் குழந்தையை கண்ணிலேயே காட்டினர். குழந்தை தலையில் ஒரு குல்லாவை மாட்டி வைத்திருந்தனர். உடம்பெல்லாம் துணியால் சுற்றி மறைத்து கொண்டு வந்து டாக்டர்கள் தந்தனர். குழந்தையை பெற்றுக் கொண்டு கதறி அழுத உறவினர்கள் இறுதி சடங்கு செய்யும் வேலையில் இறங்கினர்.

சுடுகாட்டில் குழந்தை
பிறகு சுடுகாட்டுக்கு குழந்தையை கொண்டு சென்றதும், தலையில் இருந்த குல்லா, உடலில் சுற்றப்பட்ட துணியை அகற்றி பார்த்தபோது, தலை மற்றும் நெஞ்சு பகுதியில் ரத்த காயங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோரும், உறவினர்களும் குழந்தையை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

வாக்குவாதம்
"குழந்தைக்கு உடம்பு சரியிலைன்னுதானே சொன்னீங்க? உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் எப்படி வந்தது? பிரசவத்தின்போது கீழே போட்டுட்டீங்களா? அதனால்தான் தலையில் காயங்கள் இருக்கிறதா? எப்படி காயம் வந்ததுன்னு சொல்லியே ஆகணும்" என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடம்பெல்லாம் காயம்
எந்த பதிலுமே ஆஸ்பத்திரி தரப்பில் சொல்லாததால், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டது. தகவலறிந்து போலீசார் விரைந்து வந்துவிட்டனர். உடனே ஆஸ்பத்திரி தரப்பு, "அப்படி குழந்தை இறந்ததில் சந்தேகம் இருந்தால், பிரேத பரிசோதனை செய்து பார்க்கலாம்" என்றது. ஆனால் ஏற்கனவே குழந்தை உடம்பெல்லாம் காயங்களை பார்த்த பெற்றோர்களோ பிரேத பரிசோதனை செய்ய விரும்பவில்லை என தெரிகிறது.

இறுதி சடங்கு
குழந்தை உயிரிழக்க காரணமான ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கொண்டே இருந்தனர். பிறகு கதறி அழுதுகொண்டே இறுதிச்சடங்கையும் செய்து முடித்தனர்.












Click it and Unblock the Notifications