கருப்பு ஜாக்கெட்.. கட்டுக் கட்டாய் பணம்! செக் போஸ்ட்டில் சாகர்.. மணிகண்டனிடம் கையில் இவ்வளவு தங்கமா?
கோவை: கோவை அருகே பிரத்யேக உடை அணிந்து கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 200 கிராம் தங்கம் மற்றும் 70 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் போலீசார். பணத்தை கடத்துவதற்கென்றே பிரத்யேகமாக உடை தயார் செய்து பணம், தங்கம் கடத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர்கள் இதே போல பலமுறை நகை, பணம் கடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர் போலீசார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவுக்கு கோவை தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு வழிகள் வழியாக செல்லலாம். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கேரளா தமிழ்நாடு இடையே கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், இரு மாநில போலிசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழகம் - கேரளா இடையே ஹவாலா பணப்பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில் கலால் துறையினர், காவல் துறையினர் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். அப்படி நடத்திய சோதனையில் தான் தற்போது 70 லட்சம் ரூபாய் பணமும், 200 கிராம் தங்கமும் சிக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் கோவையிலிருந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வேலந்தவளத்தில் சட்டவிரோதமாக பணம் மற்றும் தங்கம் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த கோவையைச் சேர்ந்த சாகர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். காரில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் அவர்களது உடை சற்றே பருமனாக இருந்தது. இதை அடுத்து சட்டையை கழட்டி சோதனை செய்த போது பணத்தை வைப்பதற்கு என்றே பிரத்தியேகமாக ஜாக்கெட் தயாரித்து அதற்குள் 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை மறைத்து கடைத்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் 70 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் யாருக்காக? எங்கிருந்து? தங்கம் பணம் ஆகியவற்றை கொண்டு செல்ல முயன்றார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் ஏற்கனவே பலமுறை தமிழகம் கேரளா இடையே களத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications