மக்கள் மனசு வச்சா போதுங்க.. எங்க கூட்டணி வெற்றியை எழுதி வச்சிடலாம்.. நாட்டாமையின் கான்ஃபிடன்ஸ்!
கோவை: மக்கள் நினைத்தால் எங்களது கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தை டார்கெட் செய்ய வேண்டுமென்றே கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அவர் கூறினார்.
காலம், காலமாக திமுக, அதிமுக என்று மாறிமாறி சென்று வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இந்த முறை மக்கள் நீதி மய்ய கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார்.
சரத்குமார் பிரசாரம்
சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சரத்குமார் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்
அரசியல் தொழில் அல்ல
அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகிறோம். மக்கள் நினைத்தால் எங்களது கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். கமல்ஹாசனை வெளியூர்காரர் என பரப்புரை செய்வதை வேடிக்கையாக பார்க்கிறேன். எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல. கமல்ஹாசன் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிற்கலாம் என்பதுதான் ஜனநாயகம்
வருமான வரித்துறை சோதனை மீது சந்தேகம்
மக்கள் நீதி மய்யத்தை டார்கெட் செய்ய வேண்டுமென்றே கட்சியினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் வெற்றி தொடர்பாக வரும் கருத்துக்கணிப்புகள் தவறாக கூட இருக்கலாம். கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு பொய்யாக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
அவங்க பி டீம்
இந்த தேர்தலில் மநீம கூட்டணிதான் முதல் அணி. மற்றது எல்லாம் பி டீம் ஆகும். தேர்தல் .முடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்திய பின்னர், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து இருக்கலாம். திராவிட கட்சிகள் வாக்கு வங்கியை பணம் கொடுத்து வைத்துள்ளனர். எங்களது கூட்டணியின் வெற்றி காலதாமதம் ஆனாலும், வெற்றி உறுதி என்று சரத்குமார் கூறினார்.