எங்கவிட்டாரோ, அங்க இருந்தே தொடங்குவார் சவுக்கு சங்கர்.. அப்டேட் கொடுத்த வழக்கறிஞர்
கோவை: யூடியூபர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் சவுக்கு சங்கர் அதே மன உறுதியுடன் விடுதலையாகி வருவார் என்று அவரது வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தேனி சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

மேலும், கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதையடுத்து, அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், தேனியில் இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீஸார் தனியாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் எந்தவித காரணமும் இன்றி இரண்டாவது முறையாக சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது. சவுக்கு சங்கர் வெளியே வந்தால் மீண்டும் கஞ்சா விநியோகம் செய்வார் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை அறிவுரை கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது. இதைப் பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதன் காரணமாக சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் விரைவில் விடுதலை ஆகலாம் என்று கூறப்படுகிறது.
கோவையில் இதுகுறித்து சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: தமிழக அரசுக்குப் புரியும் வகையில் நீதிமன்றம் பதில் சொல்லும் என்று நாம் தெரிவித்து இருந்தோம். இரண்டாவது குண்டாஸ் போட முகாந்திரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் பரிந்துரை செய்துள்ளனர். சவுக்கு சங்கர் மீது 27 வழக்குகள் உள்ளன. 17 வாக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது.
வீணாக அலைக்கழித்து தமிழக மக்களின் வரிப் பணத்தை வீணடித்துள்ளனர். தமிழக அரசு பின் வாங்கியது காரணமாக பெரிய மாற்றத்தில் இருந்து தப்பியுள்ளனர். விரைவில் சவுக்கு சங்கர் வெளியே வந்து விடுவார். அவரும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் போடப்படும் குண்டர் தடுப்புச் சட்டம், அதில் 51 சதவீதம் தமிழ்நாட்டில் போடப்படுகிறது. குண்டர் தடுப்புச் சட்டம் என்பது மனித உரிமை அத்துமீறல்.
சவுக்கு சங்கருக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. வழக்கமாக வழங்க கூடிய கட்டுப்பாடுகள்தான். முதலமைச்சர் பற்றி பேசியது , அவர் தரப்பில் புகார் அளித்து உள்ளார்களா?. சவுக்கு சங்கருக்கு முக்கியத்துவம் இருப்பதால் அனைவரும் பேசுகிறோம். அவரது வழக்கில் காவல் துறையும் அலைக்கழிக்கப்பட்டார்கள். சவுக்கு சங்கர் அதே மன உறுதியுடன் வருவார். துப்பாக்கிச் சூடு என்பதை எளிதாக நாம் கடந்து செல்வது பெரும் ஆபத்து என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications