இரண்டாகப் பிரிந்த பாமக.. இதுதான் பாஜகவின் சித்து விளையாட்டு - செல்வப்பெருந்தகை காட்டம்
சென்னை: பாஜக எந்த மாநிலத்தில் நுழைத்தாலும் அங்கு இருக்கின்ற ஜனநாயகத்திற்கு ஆபத்து. பாஜக எந்த மாநிலத்திற்குள் நுழைகிறதோ அது ஆமை புகுந்த வீடாக மாறும். பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்கு தெரியாமல் கட்சியின் தலைமை அலுவலகத்தை மாற்றி இருப்பது பாஜகவின் சித்து விளையாட்டு எனவும், பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயக படுகொலையை பாஜக செய்திருக்கிறது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் மாநகராட்சி மணிக்கூண்டு பகுதியில் பா.ஜ.க அரசின் ஓட்டு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வாக்குத் திருடனே பதவி விலகு என்ற முழக்கத்தோடு வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும்.

வாக்குத் திருட்டு
வாக்கு திருடியவர்கள் பதவி விலக வேண்டும் என கோவையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இரண்டு கோடி கையெழுத்து லட்சியம், ஒரு கோடி கையெழுத்து நிச்சயம் என்ற முழக்கத்துடன் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட இருக்கிறது. வாக்குகளை அபகரிக்கும் நபர்களிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க கையெழுத்து இயக்கம் நடத்துகின்றோம்.
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுகவினர்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது குறித்த கேள்விக்கு, ஒருவர் ஹரித்துவார் செல்கிறேன் என அமித்ஷாவை பார்க்கிறார், இன்னொருவர் கட்டடத்தைப் பார்க்கிறேன் என சொல்லிவிட்டு அமித்ஷாவை பார்க்கிறார். அதிமுகவினர் எதற்கு சுற்றிவளைத்து அரசியல் செய்கின்றனர். உலகத்திற்கு வழிகாட்டியான சமூகம் தமிழ் சமூகம், அவர்களிடம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சொல்லிவிட்டு நடத்தும் ஆட்டங்களை மக்கள் ரசிக்கவில்லை.
அமித்ஷா பஞ்சாயத்து
எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என சொல்லிவிட்டு சந்திக்க வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் உரிமையாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் பஞ்சாயத்து செய்வது அமித்ஷா, இதில் ஜனநாயகம் இருக்கிறதா?. வீட்டின் உரிமையாளர் எடப்பாடி என்றாலும், அமித்ஷா பஞ்சாயத்து செய்கின்றார். இது என்ன நியாயம்? என்றார்.
2 பிரிவான பாமக
இதைத்தான் ஹரியானா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பாஜகவினர் செய்தார்கள். இப்பொழுது இங்கு செய்கின்றார்கள். அதிமுகவை பல பிரிவுகளாக ஆக்கினார்கள். பாமகவை இரு பிரிவுகளாக்கினர். பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தேனாம்பேட்டையில் இருந்து கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கு தெரியாமல் எப்படி மாற்றினார்கள் என கேட்கிறார்கள். இதுதான் பாஜகவின் சித்து விளையாட்டு.
ஜனநாயகத்துக்கு ஆபத்து
பாஜக எந்த மாநிலத்தில் நுழைத்தாலும் அங்கு இருக்கின்ற ஜனநாயகத்திற்கு ஆபத்து. பாஜக எந்த மாநிலத்திற்குள் நுழைகிறதோ அது ஆமை புகுந்த வீடாக மாறும். தேனாம்பேட்டை பாமக அலுவலகம் அவருக்கு தெரியாமல் மாற்றியது யார் ? இதை தேர்தல் ஆணையம் செய்யலாமா? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் ஆணையம் எந்தவித விசாரணையும் செய்யாமல் எப்படி முகவரியை மாற்றியது? எனவும் கேள்வி எழுப்பினார்.
பிரச்சனையில் பாமக
ஒரு சமூக நீதிக்காக போராடிய கட்சி இன்று பிரச்சனையில் இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு அதில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இந்த பிரச்சனைகள் தெரியாதா?. இந்த விஷயத்தை விசாரிக்காமலேயே தேனாம்பேட்டை இருக்கும் அலுவலகத்தை திலகர் நகருக்கு மாற்றி விட்டார்கள் என்றால் இது ஜனநாயக படுகொலை . பாட்டாளி மக்கள் கட்சியில் ஜனநாயக படுகொலையை பாஜக செய்திருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி
உதய்திட்டம், நீட் தேர்வு ஜிஎஸ்டி இதையெல்லாம் விட்டுக் கொடுத்தவர்கள் அதிமுக எனவும். எது தமிழக மக்களின் உரிமை என தெரியாதா ?. ஜெயலலிதா இருந்தவரை அனுமதிக்காத விஷயங்களை எடப்பாடி அனுமதித்து விட்டார். கூட்டணி ஆட்சி என காங்கிரஸார் பேசுகின்றனரே என்ற கேள்விக்கு, நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இருக்கிறோம், எங்களுக்கு புதிய வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும் என்றால் அகில இந்திய தலைமை கொடுக்கும்,
இந்த திசையில் போங்கள், இப்படி பேசுங்கள் என சொல்லுவார்கள்.
சொந்தக் கருத்து
எனக்கு கூட்டணி தொடர்பாக இப்படி பேசுங்கள் என எந்த அறிவுறுத்தல் இல்லை. யாராவது சொந்த கருத்து சொல்லியிருந்தால் அது அவர்கள் கருத்து. இந்தியா கூட்டணியில் வலிமையாக நாங்கள் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு ஏதாவது வழிகாட்டுதல் இருந்தால் அதை அகில இந்திய தலைமை காட்டும். அப்படி சொன்னால் உங்களிடம் சொல்கிறோம். எல்லா கட்சிக்கும் எழுச்சி இருக்கும், அதுபோல தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு எழுற்சி இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications