ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்திக்கவில்லை.. அவசர அவசரமாக செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்.. என்ன மேட்டர்?
ஈரோடு: சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திக்கவில்லை என்று கூறியுள்ள செங்கோட்டையன், திட்டமிட்டு என்னைப் பற்றி வதந்தி பரப்புவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், திடீரென அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசத் தொடங்கினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் பேசியது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

செங்கோட்டையனின் இந்தக் கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து செங்கோட்டையன் வலியுறுத்தினார்.
இதனிடையே செங்கோட்டையனை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அத்தனை பதவிகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன்பின் செங்கோட்டையனின் அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தன. இதனிடையே எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிப்பாளையம் சென்ற நிலையில், ஒருநாளுக்கு முன்பாக செங்கோட்டையன் சென்னைக்கு வந்தார்.
சென்னையில் அவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், என்னைப் பற்றி விளக்கம் கொடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. எனது மனைவி சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், அவரைப் பார்க்கவே சென்னை சென்றேன்.
சில சொந்த வேலைகளும் இருந்தது. இதன்பின் ஈரோடு திரும்பிவிட்டேன். எனது நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலிமை பெற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கனவு நனவாக வேண்டும். அந்த அடிப்படையில்தான் செப்டம்பர் 5ல் அப்படியொரு கருத்தை கூறினேன். அதன்பின் யாரிடமும், வெளிப்படையாக எந்தக் கருத்தையும் கூறவில்லை.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. சென்னையில் அரசியல் ரீதியாக எந்த சந்திப்பையும் நடத்தவில்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர். இது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறேன். அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications