"நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்"! EPS-ஐ விமர்சித்த செங்கோட்டையன்
கோவை: முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இயக்கம் எடப்பாடி பழனிசாமியால் வலுவிழந்து வருகிறது என நிதியமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் தற்போதைய பலவீனமான நிலைக்கு இபிஎஸ்ஸின் தனிப்பட்ட தன்னிச்சையான தலைமையே காரணம் என்று சாடிய செங்கோட்டையன், "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கம், இன்றைக்கு இபிஎஸ்ஸின் தவறான அணுகுமுறையால் வலுவிழந்து நிற்கிறது. 'நான் ஒருவரே போதும், எனக்குப் பின் யாரும் தேவையில்லை' என்ற சுயநல எண்ணத்தில் அவர் செயல்படுகிறார்," என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் ஆன்மீக ரீதியாக இபிஎஸ்ஸைச் சூசகமாக விமர்சித்த அவர், "நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான். அதுதான் இப்போது எடப்பாடி பழனிசாமியின் நிலையாக உள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வல்லமை தமிழக முதல்வர் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இபிஎஸ்ஸின் இந்த ஆணவப் போக்கை காலம் கட்டாயம் மாற்றிக் காட்டும்," என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தனக்கே உரிய பாணியில் செங்கோட்டையன் பதிலளித்தார்.
"ஆட்சிக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள். துறைகள் இப்போதான் ஒதுக்கப்பட்டுள்ளன. நான் இப்போது சென்னை செல்கிறேன். உங்கள் வீட்டு பொருளாதாரத்தைப் பற்றி திடீரெனக் கேட்டால் உங்களால் உடனடியாகப் பதில் தர முடியுமா? அதுபோல்தான் அரசின் செயல்பாடுகளும். பொறுத்திருந்து பாருங்கள்," என்றார்.
2 நாட்களில் சாதித்த முதல்வர் விஜய்!
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் குறுகியகாலச் சாதனைகளைப் பெருமிதத்துடன் பட்டியலிட்ட அமைச்சர், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள்.
மகளிர் பாதுகாப்பு மற்றும் மாநிலம் தழுவிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 717 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக நீக்கம்.
"பொறுப்பேற்ற இரண்டே நாட்களில் இவ்வளவு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களைச் சாதித்துக் காட்டியுள்ள ஒரு முதல்வர் இந்தியாவில் விஜய் ஒருவரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது," என்று செங்கோட்டையன் புகழாரம் சூட்டினார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கூடுதல் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், எங்களது எம்எல்ஏவாக இருந்தவர், அமமுக அதிமுக கூட்டணியில் இருந்த நிர்வாகிகளின் உழைப்பால் மக்கள் ஓட்டு போட்டது குக்கர் சின்னத்திற்குத்தான். ஒரு எம்எல்ஏவால் குதிரை பேரம் வரவில்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா, அவரை அமைச்சராக்கினால் நிச்சயம் குதிரை பேரம் வரும்.
தவெகவை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான். அவர்கள் எல்லோருக்கும் சட்டம் தெரியும். அவசரப்பட்டு, கோபப்பட்டு எடுக்கும் முடிவு அவர்களுக்கும் விபரீதமாக முடியும்.
சபாநாயகர் எவ்வளவு நாள் காலம் தாழ்த்த முடியும்? அதற்கும் ஒரு வரம்பு உள்ளது. இபிஎஸ் தரப்பில் நீதிமன்றம் சென்றால் இதெல்லாம் வெளிச்சமாகிவிடும். அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டால் உறுதியாக சிபு சோரன் வழக்கு போல அது வந்துவிடும்.
ஜெயலலிதாவின் படத்தை பையில் வைத்துக்கொண்டு, தேர்தல் முடிந்த பிறகு குரோத மனத்துடன் வன்மத்துடன் அம்மாவின் தொண்டர்களைப் பேரம் பேசி ஏமாற்றி வருகிறார். அதில் ஏமாறுபவர்கள் போகட்டும், அவர்கள் எல்லாம் ரோட்டில் நிற்கப் போகிறார்கள். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் படத்தைப் பகிரங்கமாக வைத்துக்கொண்டு அதிமுகவையும் அமமுகவையும் அழிக்க நினைக்கிறார் என கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications