எடப்பாடி மீது அதிருப்தி? "நான் யாரையும் சந்திக்கவில்லை.." செங்கோட்டையன் கொடுத்த பதில்
ஈரோடு: அதிமுக தொண்டர்களின் கருத்தை பிரதிபலிப்பேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ நான் அழைக்கவில்லை என்று கூறிய செங்கோட்டையன், பிரியப்பட்டவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு வர வாய்ப்புள்ளது என்றும் கூறி இருக்கிறார்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கு எடப்பாடி பழனிசாமி அளிக்கும் முக்கியத்துவம், தமக்கு அளிக்கப்படுவதில்லை என்று செங்கோட்டையன் ஆதங்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அதிமுக கூட்டங்களில் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்வதை கூட செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். அதேபோல் அதிமுக தலைவர்களுக்கு கூட தெரியாமல் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதன்பின் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து வந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்ட போதும், செங்கோட்டையன் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் இருந்து மனம் திறந்து பேச உள்ளேன். எனது முடிவை அறிவிக்க உள்ளேன் என்று அறிவித்திருக்கிறார். இதன்பின் நேற்று தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஜெயலலிதா காலத்திலும் செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட போது கூட, அவர் எந்தவிதமாக கலகக் குரலையும் எழுப்பவில்லை. இதனால் திமுகவுக்கு செங்கோட்டையன் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது.
நீண்ட அரசியல் அனுபவம் இருந்தாலும், செங்கோட்டையன் ஒருநாளும் தலைமைப் பொறுப்புக்கு வருவதில் ஆர்வம் காட்டியதில்லை. இந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், என்னுடைய கருத்துக்களை பிரபதிலிக்க போகிறேன். யாரையும் சந்திக்கப் போவதில்லை.
செப்டம்பர் 5ஆம் தேதி கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பேசுகிறேன் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறேன். மற்றபடி யாரெல்லாம் வருவார்கள் என்று தெரியவில்லை. பிரியப்பட்டவர்கள் வருவார்கள்.. நேற்றும் அப்படிதான் வந்தார்கள்.. நாம் யாரையும் அழைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் என்ன விவகாரம் தொடர்பாக பேசப் போகிறார், அதிமுகவில் இருந்து விலகப் போகிறாரா?, எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கப் போகிறாரா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அவர் ஆதரவாளர்களை திரட்டி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசியலில் செங்கோட்டையன் மீதான கவனம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications