மாறிய முகப்புப் படம்.. மாறாத கவர் போட்டோ.. மீண்டும் ஸ்கோர் செய்த செங்கோட்டையன்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகும் அவர் ஜெயலலிதா புகைப்படத்தை தன் சட்டை பையில் வைத்துள்ளார். இந்நிலையில் செங்கோட்டையன் சமூகவலைதளங்களில் தன் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். விஜய்யுடன் இருக்கும் படத்தை அவர் மாற்றியிருப்பது அதிமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தங்கள் தலைமையில் கூட்டணி என்று அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக வியூகம் அமைத்து களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவதும் இயல்பான ஒன்றுதான். ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி பல நிர்வாகிகள் திமுக வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் செங்கோட்டையன்
தவெகவில் அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் இணைந்த பிறகு அவர் முதல்முறையாக செங்கோட்டையன் இன்று தன்னுடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தவெகவில் இணைந்தாலும் செங்கோட்டையன் தன் சட்டை பையில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜய் ஆகியோரின் புகைப்படங்களுடன் பேனர் வைத்துள்ளார். அவரின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. அதுகுறித்து செங்கோட்டையனும் விளக்கமளித்திருந்தார்.
விஜய் போட்டோ DP
தவெகவில் அப்படிப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று அவர் பெருமிதமாக கூறியிருந்தார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் செங்கோட்டையன் தன் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் அவர் தவெக தலைவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக மாற்றியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணையும்போது, விஜய் அவருக்கு சால்வை அணிந்த படத்தை முகப்புப் படமாக வைத்துள்ளார்.
விமர்சனம்
முன்னதாக செங்கோட்டையன் தன்னுடைய படத்தை அவர் முகப்புப் படமாக வைத்திருந்தார். முகப்புப் படத்தை மாற்றிய அதேநேரத்தில் அவர் பேஸ்புக் மற்றும் எக்ஸ் தளத்தில் தன் பக்கத்தின் கவர் போட்டோக்களை மாற்றவில்லை. அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா இருக்கும் அதே படத்தை அவர் கவர் போட்டோவாக தொடந்து வருகிறார்.
இதுவும் சமூகவலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது. செங்கோட்டையன் முகப்புப் படம் மாற்றிய பதிவில் தவெகவினர் வரவேற்பு தெரிவித்து ஆதரவு கமென்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். அதிமுகவினர் கடும் கொந்தளிப்புடன் செங்கோட்டையனை விமர்சித்து கமென்ட் பதிவிட்டு வருகிறார்கள். 'அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னூரில் நடத்தப்பட்ட விவசாயிகள் பாராட்டு விழாவில், ஜெயலலிதா படத்தை புறக்கணித்தார்கள்.' என்று விமர்சித்துவிட்டு இப்படி செய்வதற்கு கூச்சமாக இல்லையா என அதிமுகவினர் கமென்ட் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications