4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி!
கோவை: கோவை திமுகவில் 4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்திருக்கிறார் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி.
மருதமலை சேனாதிபதி, ராமச்சந்திரன், கிருஷ்ணன் என்ற பையா கவுண்டர், டாக்டர் வரதராஜன் ஆகிய 4 பேருக்கும் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துள்ள அவர், சிங்காநல்லூர் கார்த்திக்கிற்கு மட்டும் மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே தளபதி முருகேசன் என்பவரை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியிடத்துக்கும் தொண்டாமுத்தூர் ரவியை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கும் வேட்புமனு கொடுக்க வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.
1,2,3 கேம் ஸ்டார்ட்.. மூர்த்தியை விடுங்க.. யார் அந்த அதலை செந்தில்.. மதுரை திமுகவில் ரேஸ்: ஸ்பெஷல்
கோவை திமுக
கடந்த 2020ஆம் ஆண்டு கோவை மாவட்ட திமுகவானது 5 ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக வரதராஜன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுபாளராக பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர்.
3 ஆக குறைப்பு
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த வாரம் வெளியிட்டஅறிவிப்பில், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என மூன்றாக மட்டும் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய அமைப்பு முறைகள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதுள்ள 5 மாவட்ட பொறுப்பாளர்களில் இருவரது பதவி பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது.
4 பேருக்கு கல்தா
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 மாவட்டச் செயலாளர்களில் கார்த்திகை தவிர மற்ற 4 மாவட்டச் செயலாளர்களுக்கும் ஓய்வு கொடுக்க முடிவெடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி. அந்த வகையில் புதிதாக திருத்தியமைக்கப்பட்ட கோவை தெற்கு மாவட்ட திமுகவுக்கு தளபதி முருகேசன் என்பவரையும், கோவை வடக்கு மாவட்ட திமுகவுக்கு தொண்டாமுத்தூர் ரவி என்பவரையும், கோவை மாநகர் திமுகவுக்கு சிங்காநல்லூர் கார்த்திக்கையும் வேட்பு மனு கொடுக்க வைத்துள்ளார் செந்தில் பாலாஜி.
ராமச்சந்திரன்
இதனிடையே கோவை வடக்கு மாவட்டத்துக்கு தற்போதைய மாவட்டச்செயலாளரான சி.ஆர்.ராமச்சந்திரன் பணம் கட்டி வேட்பு மனு கொடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர் பதவி இல்லையென்றால் வேறு ஏதேனும் முக்கியப் பதவியை தலைமையிடம் எதிர்பார்த்து அவர் போட்டியில் குதித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட திமுகவில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.