தேர்தலில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி.. கோவையிலேயே தங்கிய பின்னணி!
கோவை: சட்டமன்ற தேர்தலில் கோவை தான் அதிக கவனத்தை ஈர்த்தது. திமுக வெற்றிக்காக கரூரில் இருந்து செந்தில் பாலாஜி கோவையில் கால் வைத்துள்ளார். கோவை தெற்கு தொகுதி நிலவரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நேற்று தேர்தலில் வாக்களிக்கவில்லை. அவர் கரூர் செல்லாமல் கோவையில் தான் இருந்துள்ளார். இதற்கான காரணம் தான் செம ஹைலைட்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் தான் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் கோவை தேர்தல் களம் கொதிகொதித்து கொண்டிருக்கிறது.

கோவை தெற்கு தொகுதி
திமுக செந்தில் பாலாஜி, அதிமுக வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கினார்கள். சராசரியாக ஒரு வாக்குக்கு ரூ.5,000 திமுக பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகாரளித்தனர்.
கோவை தெற்கில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நாளிலும் கோவை களம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கரூரில் வாக்கு உள்ளது.
செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லை
நேற்று காலை அவர் கரூரில் வாக்களித்துவிட்டு கோவை வருவார் என்று கூறினார்கள். ஆனால் செந்தில் பாலாஜி கரூர் செல்லவில்லை. அவர் நேற்று முழுவதும் கோவை தெற்கு தொகுதியில் இருந்துள்ளார். இதனால் அவர் வாக்களிக்கவில்லை. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "கோவை தெற்கில் அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அதனால் கடந்த சில நாட்களாக பிரச்சனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்குப்பதிவு நாளிலும் அவர்கள் இங்கு பிரச்சனை செய்ய திட்டமிட்டனர். அதை சமாளிப்பதற்காக தான் செந்தில் பாலாஜி கோவையிலேயே இருந்துவிட்டார். மேலும் அவர் வெளியூர் வேட்பாளர் என்கிற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் வைக்கிறார்கள். அதை தகர்க்கும் வகையில் தேர்தலின்போது கூட கரூர் செல்லவில்லை" என்றனர்.












Click it and Unblock the Notifications