கோவையில் 10க்கு 6 தொகுதிகள்.. லிஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி.. ஸ்டாலின் உற்சாகம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. அதில் வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவானது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கொங்கு மண்டலத்தில் தான் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கோவை நிலவரம் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன தகவலால் ஸ்டாலின் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
சட்டமன்ற தேர்தலில் கோவை தேர்தல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.

ஸ்டாலின் - செந்தில் பாலாஜி சந்திப்பு
இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கினார். கோவையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் செந்தில் பாலாஜியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
தேர்தலுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் குடியேறினார். கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் வெற்றி பெற வைப்பதற்காக பணியாற்றினார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. பரபரப்பான நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
கோவை நிலவரம்
அப்போது கோவை மாவட்ட நிலவரம் குறித்து செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு. இதை சரி செய்வதற்காக செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக வந்தார். இந்த தேர்தலில் அவரே நேரடியாக கோவையில் போட்டியிட்டார்.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதிகளில் திமுகவை வெற்றி பெற வைப்பேன் என்று செந்தில் பாலாஜி திமுக தலைமைக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். வாக்குப்பதிவு முடிவில் செந்தில் பாலாஜி மிகவும் திருப்தியாகி நம்பிக்கையுடன் இருக்கிறார். தலைவருடனான சந்திப்பில் அதைப்பற்றி அவர் கூறியுள்ளார். இதில் ஸ்டாலினும் மிகுந்த உற்சாகமாகியுள்ளார்.
திமுக வசம் 6 தொகுதிகள்
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பு உள்ளது. கோவை தெற்கு, கோவை வடக்கு, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூர் தொகுதிகள் நமக்கு சாதகமாக உள்ளன. மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகிறது. தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன என்று கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி கொங்கு மண்டலத்தில் மிகவும் வலிமையாக உள்ளது. தவெகவின் தாக்கமும் அங்கு அதிகமாக உள்ளது. இதையும் மீறி கோவை மாவட்டத்தின் பெரும்பான்மை தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பது ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றி விழா கோவையில் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது" என்றனர்.












Click it and Unblock the Notifications