பல ஆண்டு பகை.. பலே திட்டம்.. பழிக்கு பழி வாங்க துடிக்கும் கோவை ரவுடி கும்பல்.. பகீர் பின்னணி
கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று அதிகாலை ஆல்வின் என்ற பிரபல ரவுடியை போலீஸ் சுட்டுப் பிடித்தனர். ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகியிருந்த ஆல்வின், மற்றொரு கொலை திட்டத்துடன் வலம் வந்துள்ளார். இப்படி பழிக்கு பழி திட்டத்துடன் ரவுடிகள் சுற்றுவதால் கோவை பதற்றமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆல்வின். பிரபல ரவுடியான இவர் மீது மூன்று கொலை, இரண்டு கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி. கடந்தாண்டு கோவை ஆவராம்பாளையம் அருகே சத்யபாண்டி என்ற ரவுடி மற்றொரு ரவுடி கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆல்வினும் கைது செய்யப்பட்டிருந்தார். கோவை மத்திய சிறையில் இருந்த ஆல்வின், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

அதன் பிறகு ஆல்வின் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை சரியாக பின்பற்றவில்லை.. குறிப்பாக வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் ஆல்வினுக்கு பிடி வாரன்ட் பிறப்பித்தது. போலீஸ் ஆல்வினை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் தங்கியிருந்த ஆல்வினை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றுள்ளனர்.
அப்போது ஆல்வின், ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் குத்தி தப்பி செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து சிறப்புப் படை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தற்காப்புக்காக ஆல்வினின் இரண்டு கால் முட்டி பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணி குறித்து காவல்துறை கூறுகையில், கோவையில் கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டவற்றில் ஏராளமான ரவுடி கும்பல்கள் உள்ளன. அதில் கோவையின் மையப் பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் தொடர்பான கட்டப்பஞ்சாயத்தில், ரவுடி சத்யபாண்டிக்கும், மற்றொரு ரவுடி சஞ்சய் குமார் என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் தான் சத்யபாண்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சஞ்சய் குமார், ஆல்வின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் சத்யபாண்டியின் நண்பர்களுக்கு இது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. சத்யபாண்டியை கொலை செய்த சிலர் ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவர்களை கொலை செய்து பழிக்கு பழிவாங்க திட்டமிட்டனர். சத்யபாண்டியின் நெருங்கிய நண்பனான பசும்பொன் குமார் என்பவர் இந்த திட்டத்துக்கு மூளையாக இருந்துள்ளார்.
இந்த திட்டத்தை அறிந்து கொண்ட எதிர் தரப்பினர், அதற்கு முன்பாகவே பசும்பொன் குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாநகரில் துப்பாக்கியுடன் வலம் வந்த சஞ்சய் குமார், சல்ஃபன்கான், கிட்டான், சரவணக்குமார், ஜலாலுதின் உள்பட ஐந்து பேரை போலீஸ் கைது செய்தனர்.
அதேபோல ஆல்வினும் பசும்பொன் குமாரை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார். தனது கூட்டாளிகள் சிக்கிவிட்டதால், ஆல்வின் தலைமறைவாகியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளி மாநிலத்தில் வைத்து ஆல்வினை கைது செய்ய திட்டமிட்டனர். அப்போது ஆல்வின் தப்பித்துவிட்டார். அவரின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து இன்று பிடித்துள்ளனர்.
இதன்மூலம் கோவையில் மற்றொரு அசம்பாவிதத்தை தடுத்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரவுடி கும்பலின் பின்னணியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications