சில்வர் மெகா கிஃப்ட்.. அரசு பள்ளிக்கு வந்தால் வெள்ளி நாணயம்: கோவை மாணவர் சேர்க்கையில் அசத்தல்.. பலே
கோவை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. குறிப்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, மாணவர்களை ஈர்க்க 'வெள்ளி நாணயம்' வழங்கும் நூதன அறிவிப்பை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..
தமிழகம் முழுவதும் 2024-ம் ஆண்டு முதல் மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.. இதற்கு பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டிலும் மார்ச் 2-ம் தேதி முதல் சேர்க்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன..

சென்னை சைதாப்பேட்டை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் தொடங்கி வைத்தார்.. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்த 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
நடப்பாண்டில் மட்டும் சுமார் 5 லட்சம் புதிய மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்..
இந்த அரசுப் பள்ளி சேர்க்கை திருவிழாவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள வள்ளுவர் நகரவை தொடக்கப்பள்ளி ஒரு படி மேலே சென்று அசத்தியுள்ளது..
அரசு பள்ளி சேர்க்கை
தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் தலைமையிலான இந்த பள்ளியில், வரும் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் முதலில் சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு தலா 2 கிராம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. பள்ளியின் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த ஆசிரியர்கள் இத்தகைய புதுமையான உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்..
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து ஊர் ஊராகச் சென்று ஆசிரியர்கள் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.. குறிப்பாக, காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம், நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வழிகாட்டுதல் போன்றவை குறித்து பெற்றோரிடம் விளக்கப்படுகிறது..
வெள்ளி நாணயம் மெகா பரிசு
மேலும், அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதும், உயர்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதும் முக்கிய அம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன.. பெண் குழந்தைகளின் உயர் கல்வியை உறுதி செய்ய மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டங்கள் குறித்தும் துண்டுப் பிரசுரங்கள் வழியாக ஆசிரியர்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்..
பள்ளி வளாகங்களில் காற்றோட்டமான வகுப்பறைகள், தூய்மையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இருப்பதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் கிடைக்கும் கூடுதல் சலுகைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.. கோவை பள்ளியின் வெள்ளி நாணயம் போன்ற ஊக்கத்தொகைகளும், அரசின் நலத்திட்டங்களும் இணைந்து இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications