எடப்பாடி கூட்டத்தில் ‘பிக்பாக்கெட்’ அடித்த 6 பேர் கைது.. டிரோன் கேமரா மூலம் தட்டித் தூக்கிய போலீஸ்!
கோவை: கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்துக்கு வருகை தந்திருந்த மூன்று பேரிடம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் பணம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிக்பாக்கெட் அடித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மேட்டுப்பாளயத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்திற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி தங்கராஜின் ரூ.1 லட்சம், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்திடம் ரூ 1 லட்சம் என கைவரிசை காட்டிய பிக்பாக்கெட் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

எடப்பாடி சுற்றுப்பயணம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன்படி, அதிமுகவும் தனது தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப் பயணத்தை கடந்த 7 ஆம் தேதி கோவையில் தொடங்கினார். அதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிக் பாக்கெட்
இந்தக் கூட்டத்துக்கு வந்து மண்டபத்துக்கு வெளியே காத்திருந்த தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் என்பவர் பேன்ட் பாக்கெட்டை பிளேடால் அறுத்த மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பிக்பாக்கெட் அடித்தனர். அதேபோல், நெல்லித்துறையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அபு என்பவரிடம் ரூ. 2,500 பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேட்டுப்பாளையம் போலீசார் ட்ரோன் கேமரா வாயிலாக ஆய்வு செய்ததில், ஆந்திராவை சேர்ந்த கும்பல் ஒன்று பிக்பாக்கெட் நடத்தியது தெரியவந்தது. அவர்களில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது
இந்நிலையில் இந்த பிக்பாக்கெட் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1,22,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேட்டுப்பாளையம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications