பதுங்கிப் பாய்ந்த கட்டுவிரியன்.. பறிபோன பாம்புபிடி வீரரின் உயிர்.. கோவை அருகே சோகம்
கோவை: கோவை மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்குள் புகுந்த பாம்பைப் பிடிக்கச் சென்ற பாம்புபிடி வீரரின் காலை கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கடந்த 15 ஆண்டுகளாக பாம்புபிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம், கோவை - தடாகம் சாலையில் உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து வனப் பகுதியில் விடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பு பிடிப்பதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்குள் பாம்பு இருப்பதாக நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்த தகவலின்பேரில் முரளி அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது இருசக்கர வாகனங்களுக்கு இடையே 3 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஷம் அதிகமுள்ள அந்தப் பாம்பை அவர் பிடிக்க முயன்றார். அப்போது, முரளிதரனின் காலில் பாம்பு தீண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறிய நிலையில் முரளி மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஊழியர்கள் முரளியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முரளி கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வகையான விஷமுள்ள பாம்புகளை பிடித்து வனப் பகுதியில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பாம்பு பிடிக்கும்போது எதிர்பாராத வகையில் பாம்பு தீண்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 40 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை மீட்டு அவர் வனப் பகுதியில் விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications