அறிவித்ததுமே ஒத்திவைக்கப்பட்டது எடப்பாடி சுற்றுப் பயணம்! 10 நாள் கழித்துதான் டூர்.. அறிவித்த வேலுமணி
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்து இன்று அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி. முதலில், ஜனவரி 31 ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் எனக் கூறிய வேலுமணி, பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில், தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது எதிர்க்கட்சியான அதிமுக. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், பா.வளர்மதி ஆகியோர் கொண்ட குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அந்தக் குழு தலைமையிடம் பல்வேறு தகவல்களை கொண்டு சேர்த்துள்ளது.
எடப்பாடி சுற்றுப்பயணம்
இந்நிலையில், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்றிய செயலாளர் மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வியூகம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்ததில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்வியைத் தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது என கங்கணம் கட்டி இறங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எஸ்பி வேலுமணி அறிவிப்பு
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் தொடர்பான தகவல்களை இன்று கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
இன்று கோவையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, “வரும் ஜனவரி 31 ஆம் தேதி கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 31 ஆம் தேதி தொண்டாமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ராணுவம் மாதிரிதான். ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்தீர்களோ, அதேபோல இருக்க வேண்டும். ஜெயலலிதா இருக்கும் போது என்னை பதவியில் இருந்து தூக்கிவிட்டு வெறும் உறுப்பினராக மாற்றினார். அதேபோல சிலரது பதவிகள் மாறினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 2 கோடியாக எடப்பாடி பழனிசாமி உயர்த்தியுள்ளார்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து எஸ்.பி வேலுமணி, செயல்வீரர்கள் கூட்டம் நிறைவடையும்போது, எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தார். சிறிது நேரத்துக்கு முன்பு, வரும் 31 ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் எனக் கூறிய எஸ்பி வேலுமணி, பின்னர் பிப்ரவரி 9 ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் என அறிவித்தது அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications