சென்னை – கோவைக்கு ரயிலில் போறீங்களா.. நோட் பண்ணுங்க மக்களே.. சூப்பர் அறிவிப்பு
கோவை: தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கோவை போத்தனூர் ரயில் நிலையத்துக்கு இன்று (30.10.2024) சிறப்பு முன்பதிவில்லா ரயில் புறப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. புத்தாடை, பட்டாசு, இனிப்பு, காரம், இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அரை நாளும், நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து நாள்கள் தொடர் விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் குவிந்து வருகின்றன. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. அதிகளவு மக்கள் ஊருக்கு செல்வதால் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பல மாதங்களுக்கு முன்பிருந்து காத்திருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்தும் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். கோவையில் இருந்து ஏராளமானோர் சென்னையில் தங்கி படித்தும், பணிபுரிந்தும் வருகின்றனர். டிக்கெட்டுகள் முன்பதிவு காலியானது, மறுபக்கம் கட்டண உயர்வு காரணமாக அவர்கள் ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்துக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில் இயக்கப்பட உள்ளது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரயில் எண் (06159) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 30.10.2024 இன்று இரவு 10.10 மணிக்கு புறப்படுகிறது. நாளை காலை 7 மணியளவில் இந்த ரயில் போத்தனூர் ரயில் நிலையம் வந்தடையும். அதில் இரண்டாம் வகுப்புக்கான சுமார் 16 பெட்டிகள் உள்ளன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா சாலை, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார் பேட்டை, திருப்பத்தூர், சமல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, சேலம், சங்ககரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்கள் நிறுத்தங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கடைசியாக இந்த ரயில் கோவை போத்தனூர் ரயில் நிலையத்துக்கு வரும். இந்த ரயில் கோவை ரயில் நிலையத்துக்கு வராது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மக்கள் இந்த கட்டணமில்லா சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளவும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications