அசத்திய எஸ்பி.. அசந்த ஸ்டாலின்! பேனர்கள், கொடிகள் இல்லாத பொள்ளாச்சி மாநாடு - முன்னுதாரணமான திமுக
கோவை: பொள்ளாச்சியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட திமுக மாநாட்டுக்காக எந்தவிதமான பேனர்கள், கொடிகள் ஏதும் சாலையோரங்களில் வைக்காமல் திமுக முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், மாநாடுகளை நடத்தினால் பல கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு பேனர்கள், கொடிகளை சாலையோரங்களில் வைப்பது வழக்கம்.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்களால் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.

கோவை, சென்னை சம்பவங்கள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் அதிமுக பேனரால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னையில் ஒரு பெண் அதிமுகவின் கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளாகி இறந்தார். இதனை தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் நிர்வாகிகளிடம் சாலையில் கொடி கம்பங்களை நடுவது, ப்ளக்ஸ், பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

பொள்ளாச்சி திமுக மாநாடு
ஆனாலும், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து கொடிகள், பேனர்களை வைத்து வந்தனர். இதனால் ஆங்காங்கே விபத்துகளும், போக்குவரத்து பாதிப்புகளும் தொடர் கதையாகி வந்தன. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட திமுகவின் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது.

பேனர், கொடிகள் இல்லை
இதில் பங்கேற்க வந்திருந்த மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் ஒரே ஆச்சரியம். மாநாட்டை முன்னிட்டு நகரத்தில் பேனர்களோ, திமுகவின் கொடி கம்பங்களோ இடம்பெறவில்லை. முதலமைச்சரவை வரவேற்றும் பேனர்கள் ஏதும் வைக்கப்படவில்லை. மாநாடு நடைபெறும் இடம் மற்றும் வரவேற்பு கொடுக்கும் 19 இடங்களில் மட்டுமே கட்சி கொடிகள் நடப்பட்டதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி ஆர்டர்
பொள்ளாச்சி மாநாட்டை முன்னிட்டு கோவை திமுகவினர் முதலமைச்சருக்கு பிளக்ஸ், பேனர்கள், கொடிகள் கட்டி தடபுடல் வரவேற்பு அளிக்கவே தயாராக இருந்தார்களாம். ஆனால் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பிளக்ஸ், பேனர்கள், கொடிகள் எதையும் வைக்கக்கூடாது என்று நிர்வாகிகளிடம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் பாராட்டு
நேற்று கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தது, மாநாட்டை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தது போன்ற காரணத்தால் செந்தில் பாலாஜியை பாராட்டியதுடன், மாநாட்டுக்காக பிளக்ஸ், பேனர்கள், கொடிகளை வைக்காமல் தனது உத்தரவை பின்பற்றியதற்கு பாராட்டு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications