தொண்டர்களையே கண்டு கொள்ளாதவர் கமல்.. மக்கள் பிரச்சனையை தீர்ப்பாரா... பெண் கேள்வி
கோவை: சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்ய தடை கோரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டரின் மனைவி ஒருவர், அளித்துள்ள புகார் மனு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் பனப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
பாலமுருகன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி பல்லடத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினரான பாலமுருகனின் மனைவி விஜயகுமாரி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல்ஹாசன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த விவகாரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications