நான் தான் ஸ்பைடர்மேன்! கல்லூரி மாடியில் இருந்து குதித்த மாணவர்! ஷாக் சிசிடிவி.. இப்போ கால் போச்சே!
கோவை: கோவையில் தனக்கு சூப்பர் பவர் உள்ளதாக நினைத்து 4 வது மாடியில் இருந்து குதித்த மாணவர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் படங்களை பார்த்து தனக்கும் பவர் உள்ளதாக நினைத்த அவர், தற்போது கை, கால் முறிந்த நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 - வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது இளைஞர் குதித்து உள்ளார்.

அவருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த மாணவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். செட்டிபாளையம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், காயம் அடைந்த மாணவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (19) என்பது தெரியவந்தது.
கல்லூரியில் பிடெக் (செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்) மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
தொடர்ந்து அவர் கல்லூரி விடுதியில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், உள்ளிட்ட படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சூப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகரான அவர், எப்போதும் அதனை பற்றியே நண்பர்களிடமும் பேசி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கல்லூரியில் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்த அவர் தனக்கு சூப்பர் பவர் வந்துவிட்டது என கூறியுள்ளார். ஆனால் சக மாணவர்கள் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது பேசாம இரு என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபு, தன்னால் எந்த கட்டிடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என்றும் நம்பி இருந்ததால், கல்லூரி மாடியில் இருந்து குதிக்கிறேன் பார் என கூறிவிட்டு மாடியில் இருந்து குதித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை 6.30 மணியளவில், அவர் மாணவர்கள் விடுதியின் 4 வது மாடியில் இருந்த போது, பக்கத்து மாடிக்கு தாவுவதாக கூறி திடீரென குதித்த பிரபு தரையில் விழுந்தார். இதில் இவருக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரது நண்பர்கள் பிரபுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications