பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் சூர்யா.. தொடங்கியது "சூர்யா 45" படப்பிடிப்பு
கோவை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45 வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலுக்கு வந்த நடிகர் சூர்யா சுவாமி தரிசனம் செய்தார். திடீரென நடிகர் சூர்யா வந்ததால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்துக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படத்தை முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடிக்கவுள்ளார். கங்குவா படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

கங்குவா திரைப்படத்தில் சப்தம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தயாரிப்பாளர்கள் சார்பில் சப்தத்தை குறைக்க தியேட்டர் உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், கடுமையான விமர்சனங்கள் அப்படம் மீதும், சூர்யாவின் மீதும் வந்த வண்ணம் இருந்தன. கங்குவா படம் பெரிய தோல்வி அடைந்ததுடன், மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கூட சிலர் வேண்டுமென்றே சூர்யாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கோயில்களுக்குச் சென்று பரிகார பூஜைகளில் நடிகர் சூர்யா ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கங்குவா படம் கடும் விமர்சனத்துக்குள்ளான பிறகு சிறுத்தை சிவாவுடன் இணைந்து நடிகர் சூர்யா நரசிம்மர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், திருப்பதி திருமலைக்கு இருவருமாகச் சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தனர். ஏற்கனவே திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிகா கோயில் கட்டுவதற்கு செலவு செய்யாதீர்கள். அதற்கு பதிலாக குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கங்குவா படம் தோல்விக்கு ஜோதிகாவின் பேச்சும் ஒரு காரணம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் கோயில் கோயிலாக சென்று வருவதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் தொடங்கியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திடீரென நடிகர் சூர்யா வந்ததால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டார பகுதியில் சினிமா படபிடிப்பு நடக்கும் பொழுது இந்த கோவிலில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமெடி நடிகர் யோகி பாபு கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
இதையடுத்து, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தயாரிக்கும் சூர்யா 45 என்ற புதிய படத்திற்கு மாசாணி அம்மன் கோவிலில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முன்னதாக கோவில் வளாகத்திற்கு வந்த சூர்யாவை, அறங்காவலர் குழு முரளி கிருஷ்ணன் வரவேற்று அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனால், கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாசாணி அம்மன் பாலாலயம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் சூர்யா தரிசனம் செய்தார். திடீரென நடிகர் சூர்யா கோவிலுக்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் பலர் சூர்யாவை காண வருகை தந்தனர். தங்களது செல்போனில் சுயபடங்களை சூர்யாவுடன் எடுத்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications