நிதி கொடுக்காத மத்திய அரசு! கோவை, மதுரை மெட்ரோவுக்கு தமிழக அரசு கையில் எடுத்த பிளான் B! திடீர் ஆய்வு
கோவை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமான பணிகள் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த மெட்ரோ திட்டங்களுக்கு நிதியளிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு முடிவையும் எடுக்காத நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியுடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு ரூட்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. இதில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், 2ம் கட்ட கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது.

காலதாமதம்: சென்னை மெட்ரோ கட்டுமானத்தின் இரண்டாம் கட்டம் இப்போது நகரில் நடந்து வருகிறது. அதேபோல சென்னையைத் தாண்டி கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியானது. இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் காலதாமதம் செய்வதாகத் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
பிளான் பி: இதனால் தமிழ்நாடு அரசு அடுத்த பிளானாக ஆசிய முதலீட்டு வங்கியிடம் கடன் பெற்று பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாகக் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களைச் சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயல்படுத்தத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சமீபத்தில் தான் சென்னை மெட்ரோ அதிகாரிகள் மற்றும் ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் இடையே மீட்டிங் நடைபெற்றது. இதையடுத்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் இப்போது கோவை மற்றும் மதுரைக்கு நேரில் சென்று ஆய்வுப் பணிகளில் இறங்கியுள்ளனர். இவர்கள் அளிக்கும் ரிப்போர்ட்டை பொறுத்தே திட்டங்களுக்கு நிதியளிப்பது குறித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி முடிவெடுக்கும்.
சென்னை மெட்ரோ: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்த தமிழ்நாடு அரசு இதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு முதலில் வெளியானது. கோவையில் அவினாசி, சத்தியமங்கலம் சாலையில் ரூ.10,740 கோடியிலும், மதுரையில் திருமங்கலம் ஒத்தக்கடை இடையே ரூ.11,368 கோடியிலும் மெட்ரோ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்தத் திட்டங்களுக்குத் திட்ட அறிக்கை இப்போது ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.. இதற்கு ஆகும் செலவை 50:50 என்று மத்திய அரசும் மாநில அரசும் பிரித்துக் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. இருப்பினும், இதில் மத்திய அரசு எந்தவொரு நிதியையும் அளிக்காமல் மவுனமாக இருக்கும் நிலையில், தமிழக அரசே தனது சொந்த நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் இதேபோன்ற கோரிக்கையைக் கோவை மற்றும் மதுரைக்கு மத்திய அரசு பரிசீலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிகாரிகள்: இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், "இந்தத் திட்டத்திற்குக் கடன் வழங்குவது தொடர்பாக ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் இப்போது ஆய்வு செய்கிறார்கள். பின்னர், அவர்கள் வெள்ளிக்கிழமை அரசின் நிதித் துறை செயலாளருடனான ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்கள். அதன் பிறகே இறுதி முடிவை எடுப்பார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications