கோவை, மதுரைக்கு.. என்ன ஆனாலும் மெட்ரோ கொண்டு வரப்படும்.. இப்போ பாருங்க! தமிழக அரசின் தரமான மூவ்!
கோயம்புத்தூர்: கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மீண்டும் செயல்படுத்தக் கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நிராகரிக்கப்பட்ட இத்திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் தலையீட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ திட்டங்களுக்கான தேவை போதுமானதாக இல்லை என்ற மத்திய அரசின் மதிப்பீட்டை மறுக்கும் வகையில், மாநில அரசு தனது கோரிக்கையை கூடுதல் தகவல்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க உள்ளது.

பயணிகளின் தேவை போதிய அளவில் இல்லை என்பதே மத்திய அரசின் முக்கியப் பிரச்சினை என்று சென்னை மெட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கோவை மற்றும் மதுரை வளர்ந்து வரும் தொழில் நகரங்கள்; பொருளாதாரம் பெருகி, மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் ஏன் அவசியம் என்பதை நிரூபிக்க விரிவான தரவுகளைச் சமர்ப்பித்து, எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம்," என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், 2017 மெட்ரோ ரயில் கொள்கைக்கு இணங்கவில்லை எனக் கூறி, இரு நகரங்களின் மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPRs) தமிழகத்திடம் திருப்பி அனுப்பியிருந்தது. இந்த நிராகரிப்பின் தகவல்கள், திட்டங்கள் அதிக பயணிகளைக் காட்டியதாகவும், பொறியியல் சவால்களை குறைத்து மதிப்பிட்டதாகவும், 50:50 நிதிப் பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ திட்டமிடுதலுக்குத் தேவையான மக்கள் தொகை வரம்புகளை எட்டவில்லை என்றும் குறிப்பிட்டன.
கோவை மெட்ரோ திட்டம்
கோவை திட்டத்துக்கான நாளொன்றுக்கு 5,90,000 பயணிகள் என்ற மதிப்பீட்டை மத்திய அமைச்சகம் கேள்விக்குள்ளாக்கியது. இது, பிப்ரவரி 2025 நிலவரப்படி, சென்னை மெட்ரோவின் 55 கி.மீ. முதல் கட்டத் திட்டம் பதிவு செய்த பயணிகளை விட அதிகம். 34 கி.மீ. நீளமுள்ள இந்த வலையமைப்பில், 6-8 கி.மீ. குறைவான பயணத் தூரங்களும், மெட்ரோவைப் போலவே இருக்கும் சாலைப் போக்குவரத்து வேகமும், மக்கள் மெட்ரோவுக்கு மாறுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் எனக் கூறப்பட்டது.
முக்கிய வழித்தடங்களில் 7-12 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய சாலைகள், அதிக இடங்களை இடிக்காமல், மேம்பாலங்கள் மற்றும் 22 மீட்டர் அகல மெட்ரோ நிலையங்கள் அமைப்பதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து கவலைகளை எழுப்பின. மதுரைக்கும் இதேபோன்ற மதிப்பீடு செய்யப்பட்டது. அங்குள்ள விரிவான போக்குவரத்துத் திட்டம், மெட்ரோ ரயில் அமைப்புக்கு பதிலாக விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பை (BRTS) பொருத்தமான தீர்வாக சுட்டிக்காட்டுவதாக அமைச்சகம் தெரிவித்தது.
மதுரை நகரமும் மக்கள் தொகை வரம்பை எட்டாததால், குறைந்த செலவில், எளிதில் விரிவாக்கக்கூடிய பேருந்து வலையமைப்பு போன்ற மாற்று வழிகள் சிறந்த மதிப்பை அளிக்கும் என்று மத்திய அரசு வாதிட்டது. எனினும், இத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
மத்திய அரசு நிராகரிப்பில் கூறியது என்ன?
கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தேவையான 20 லட்சம் மக்கள் தொகை இல்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் புகைப்படத்தில் இணைக்கப்பட்டு உள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், நவம்பர் 14, 2025 அன்று வெளியிட்ட தகவலில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை 15.84 லட்சம் என்றும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க, அதன் மக்கள் தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான போக்குவரத்து திட்டத்தின்படி, மதுரைக்கு விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு (BRTS) பொருத்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மெட்ரோ திட்டங்கள் அதிக செலவு கொண்டவை என்பதால், நீண்டகால நிலைத்தன்மை கருதி கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும். இந்த நகரங்களுக்கு, மலிவு விலையிலான மற்ற நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகளான வலுவான பேருந்து சேவை மற்றும் BRTS ஆகியவை பொருத்தமானதாக இருக்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மேற்கண்ட காரணங்களால், கோவை மெட்ரோ ரயில் திட்ட மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன," என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு அதிகாரி ஒருவர், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மாற்றாக பிற போக்குவரத்து முறைகளை ஆராயுமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்தார். "எப்படியும், நாங்கள் எங்கள் தரப்பை நியாயப்படுத்துவோம்" என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications