ரபேல் ஒப்பந்த விவகாரமா? அதாங்க சொல்றோம்… அது ஒரு செத்த குதிரை.. சொல்கிறார் தமிழிசை
Recommended Video

கோவை: ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சித்துள்ளார்.
கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் பிரதமரின் வருகையின் போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்குகிறது. மத்திய அரசு மீது எவ்வித விமர்சனங்களையும் எதிர்க்கட்சிகளால் சுமத்த முடிய வில்லை. எனவே தான்... ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்கின்றன.

மமதாவுக்கு தகுதி கிடையாது
மோடியை விமர்சிக்க மமதா பானர்ஜிக்கு எவ்வித தகுதியும் கிடையாது. தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே பாஜக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டது.பிரதமர், பாஜக தேசிய தலைவர், அமைச்சர்களின் வருகை பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைத்து தான் போட்டி என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது.

பட்டியல் தருகிறேன்
கமலஹாசன் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வந்தவர். எனவே அவரால் பாஜக ஆட்சியை மதிப்பிட முடியாது. தமிழகத்திற்கு பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என கமல் கேட்கட்டும், அதற்கான பட்டியல் தருகிறேன்.

மகிழ்ச்சியில் மக்கள்
விமானத்தில் கவுகாத்தியில் இருந்து தமிழகம் வருவோர் எல்லாம் என்னிடம் .. பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார் இது மிக்க மிகிழ்ச்சி என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு மோடியின் வருகையை தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் புகார்
தமிழகத்தில் வளர்ச்சி பாதையை பிரதமர் மோடி கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனை எதிர்க்கட்சிகள் பொறுத்து கொள்ள முடியவில்லை அதனால் ரபேல் போர் விமானம் ஊழல் என குற்றம் சாட்டுகின்றனர்.

ஊழலற்ற ஆட்சி
ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற வில்லை. போர் விமானங்கள் வாங்கியது நாட்டின் பாதுகாப்புக்காக.. ஆனால் அதனை காங்கிரஸ் கொச்சைப்படுத்தி வருகிறது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனை காங்கிரஸ் கட்சியால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

திருப்புமுனையாக அமையும்
பிரதமர் மோடியின் திருப்பூர் கூட்டம் திருப்புமுனையாக அமையும். மதுரை மாநாட்டில் 9 நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். திருப்பூர் கூட்டத்தில் 8 நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள், தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மற்ற கட்சிகளுடன் கூட்டணி
பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிடாது. பாஜக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். காங்கிரஸ், திராவிட கட்சிகள் கூட்டணி தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணியானது கொள்கை ரீதியில் அமைக்கப்படும். அதற்கான அணுகுமுறை மேற்கொண்டு வருகிறோம். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியால் காங்கிரசை பலப்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications