கோவை வாக்குச்சாவடியில் ‘டினா’ ரோபோ கலக்கல்! பாரம்பரிய உடையில் வரவேற்பு.. செல்பி எடுத்த வாக்காளர்கள்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிக்க வந்த பொதுமக்களை மனிதர்களுக்குப் பதிலாக ஒரு ரோபோ இனிப்பு வழங்கி வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்தமுறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும், ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லுகட்டி கொண்டிருக்கிறார்கள்.

கவனம் ஈர்த்த டினா ரோபோ
வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடைமை ஆற்றுவதற்காக வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து புறப்பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களாக திரும்பி வருகின்றனர். நேற்று பணியை முடித்துவிட்டும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்று காலை 7 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திரண்டு வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிக்க வந்த பொதுமக்களை மனிதர்களுக்குப் பதிலாக டினா என்ற ஒரு ரோபோ இனிப்பு வழங்கி வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோவை அதே அரசு கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
பாரம்பரிய உடையில் வரவேற்பு
'டினா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவிற்கு தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரோபோ வாக்களிக்க வந்த வாக்காளர்களை இன்முகத்துடன் வரவேற்றது. ஜாய்ஸ்டிக் கருவியின் உதவியுடன் இந்த ரோபோ இயக்கப்பட்டது. இந்த ரோபோ வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மிட்டாய்களை வழங்கி வரவேற்றது.
மாணவரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேர்தல் நாளில் வாக்காளர்களின் பதற்றத்தைக் குறைக்கவும், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். முதல்முறையாக வாக்களிக்க வந்த இளைஞர்கள் டினா ரோபோவுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications